துபாய்: மத்திய கிழக்கில் 8வது நாளாக நேற்றும் போர் நீடித்த நிலையில், அரபு நாடுகளிடம் ஈரான் மன்னிப்பு கேட்டது. அதே சமயம், அமெரிக்காவிடம் சரணடைய மாட்டோம் என ஈரான் அதிபர் பெசேஷ்கியன் கூறியதைத் தொடர்ந்து, இதுவரை இல்லாத மிகக் கடும் தாக்குதல் நடத்தப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டி உள்ளார். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கடந்த 28ம் தேதி நடத்திய தாக்குதல், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போராக விரிவடைந்துள்ளது.
அமெரிக்க, இஸ்ரேல் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான், அந்நாடுகளின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள அரபு நாடுகள் மீதும் ஏவுகணை, டிரோன்களை ஏவி வருகிறது. இதனால் எண்ணெய் விநியோகம் சீர்குலைந்து, உலக பொருளாதாரம் நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய கிழக்கில் 8வது நாளாக நேற்றும் போர் நீடித்தது. அதிகாலையிலேயே இஸ்ரேல், அமெரிக்க போர் விமானங்கள் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
இஸ்ரேலின் ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்கள் மீதும், பக்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்தும், ஈரான் ஏவுகணைகளை ஏவி பதில் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில், ஈரான் நிபந்தனையின்றி சரணடையும் வரை பேச்சுவார்த்தை நடத்த முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். மேலும், அமெரிக்கா ஏற்கக் கூடிய ஒருவர் ஈரானுக்கு தலைமை ஏற்றால், அந்நாட்டை வளமான செழிப்பான நாடாக மாற்ற உதவுவதாக சலுகை அறிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனின் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஈரான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில், ‘‘எங்களால் தாக்குதலுக்கு உள்ளான அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் ஒருபோதும் அண்டை நாடுகளை தாக்கவோ, ஆக்கிரமிக்கவோ விரும்பவில்லை. இனி, அண்டை நாடுகளில் இருந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருந்தால், அவர்கள் மீது எங்களின் டிரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் நடத்தாது. இதற்கு நாட்டின் தலைமை கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
அதே சமயம், அமெரிக்காவிடம் சரணடைய மாட்டோம். அது எப்போதும் நடக்கவே நடக்காது. அது ஒரு கனவு. அந்த கனவை அவர்கள் தங்கள் கல்லறைகளில்தான் காண முடியும்’’ என அதிபர் பெசேஷ்கியன், டிரம்புக்கு பதிலடி கொடுத்தார். ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, பெசேஷ்கியன் உட்பட 3 பேர் அடங்கிய இடைக்கால தலைமை கவுன்சில் ஈரானை வழிநடத்தி வருகிறது.

அதிபர் பெசேஷ்கியனின் பேச்சால் ஆத்திரமடைந்த டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில், ‘‘அரபு நாடுகளிடம் மன்னிப்பு கேட்டு ஈரான் சரணடைந்துள்ளது. இனி பதில் தாக்குதல் நடத்த மாட்டோம் என கூறி உள்ளது. இது அமெரிக்கா, இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் மட்டுமே நடந்துள்ளது. ஈரான் இனி மத்திய கிழக்கின் கொடுமைக்காரன் அல்ல, அது மத்திய கிழக்கின் தோல்வி நாடு. சரணடையும் முன்பாக அது முழுமையாக சரியும். ஈரான் அதிகாரிகள் இனி இலக்காக மாறுவார்கள். இன்று ஈரான் மிகக் கடுமையாக தாக்கப்படும். ஈரானின் மோசமான நடத்தை காரணமாக முழுமையாக அழிவு காத்திருக்கிறது’’ என மிரட்டல் விடுத்தார்.
அதே சமயம், அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ஈரான் அதிபர் பெசேஷ்கியன் கூறிய பிறகும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது குழப்பத்தை ஏற்படுத்தியது. துபாயில் பல்வேறு குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன. அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானத்திற்காக பயணிகள் காத்திருந்த சமயத்தில், ஏவுகணை தாக்குதலுக்கான சைரன் ஒலித்ததால் பயணிகள் பதறியடித்து ரயில்வே சுரங்கப்பாதையில் தஞ்சமடைந்தனர்.
பக்ரைனில் தொடர்ந்து சைரன்கள் ஒலித்தபடி இருந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து அமைதி காக்க அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. பின்னர் அதிபர் பெசேஷ்கியன் தனது சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானின் தற்காப்பு நடவடிக்கைகள் எங்கள் தேசத்திற்கு எதிரான தாக்குதல்களின் தோற்றமாகவும் மூலமாகவும் இருக்கும் இலக்குகள் மற்றும் இடங்களுக்கு எதிரானது மட்டுமே. அவை எங்கள் நியாயமான இலக்குகளாக நாங்கள் கருதுகிறோம்.
எங்கள் நட்பு மற்றும் அண்டை நாடுகளைத் தாக்கவில்லை. ஆனால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையே குறிவைத்துள்ளோம். அமெரிக்காவின் தாக்குதலுக்கு அரபு நாடுகள் ஒத்துழைக்காமல் இருந்தால் அவர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். ஈரான் எந்த வற்புறுத்தலுக்கும் அடிபணியாது’’ என தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
இப்போர் 8வது நாளாக நீடிக்கும் நிலையில், ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியிருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
* சிபிஎஸ்இ தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு
சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மத்திய கிழக்கில் பக்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் தற்போதைய சூழ்நிலை காரணமாக வரும் 9, 10, 11ம் தேதிகளில் நடக்க இருந்த 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றார். ஏற்கனவே கடந்த 2, 5, 7ம் தேதி நடக்க இருந்த இத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இதே போல, 10ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் வரும் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
* இதுவரை இறப்புகள்
ஈரான் – 1,332
அரபு நாடுகள் – 9
லெபனான் – 217
இஸ்ரேல் – 11
அமெரிக்கா – 6 வீரர்கள்
* ஈரானுக்கு ரஷ்யா உதவி
அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற ராணுவ தளங்கள் குறித்து ஈரானுக்கு உதவக்கூடிய தகவல்களை ரஷ்யா வழங்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இத்தகவல்களை வைத்து என்ன செய்ய வேண்டுமென்பது குறித்தும் ரஷ்யா ஈரானுக்கு உதவுவதாக கூறி உள்ளது. இது ஈரான் போரில் ரஷ்யா ஈடுபடுவதற்கான முதல் அறிகுறி என்றும் உளவுத்துறையின் பெயர் வெளியிடாத அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
