கோவை: தமிழகத்தையே உலுக்கிய மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி கோவையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரை சேர்ந்த தனது காதலருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் அந்த கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனிடம் தகராறு செய்துள்ளனர்.
தொடர்ந்து அந்த வாலிபர்கள் கார் கண்ணாடியை உடைத்து திடீரென அரிவாளால் மாணவியின் காதலனை தலையில் வெட்டி தாக்கியுள்ளனர். அதன்பின், 3 பேரும் அந்த கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்து சென்று கத்தி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கிடையே, தலையில் வெட்டு காயத்துடன் மாணவியின் காதலன் ரத்தம் சொட்ட சொட்ட பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அவரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் இருந்து செல்போனை வாங்கி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், காயம் அடைந்த நிலையில் இருந்த அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட போலீசார் இரவு 11 மணியில் இருந்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.
ரயில்வே தண்டவாளம் பகுதியிலும் சென்று போலீசார் தேடினர். 5 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் 4 மணியளவில் மாணவியை மீட்டனர். உடனடியாக அவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட 3 பேரை சுட்டு பிடித்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) என தெரியவந்தது.
இவர்களில், சதீஷ் மற்றும் காளீஸ்வரன் அண்ணன்-தம்பி என்பதும், குணா அவர்களின் தூரத்து உறவினர் என்பதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து கோவை மத்திய சிறையில் ஜே.எம். 1 நீதிபதி தமிழ் இனியன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது, மாணவி மற்றும் ஆண் நண்பர் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை அடையாளம் கண்டு உறுதி செய்தனர். பின்னர் 3 பேருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ மற்றும் ஆண்மை பரிசோதனை செய்து மாதிரிகளை சேகரித்து சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் வழக்கு விசாரணை ஜே.எம். 2 கோர்ட்டில் இருந்து கூடுதல் மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சிந்து வழக்கை விசாரித்து வந்தார். பின்னர் கூடுதல் மகிளா கோர்ட்டில் கடந்த நவம்பர் 24ம் தேதி 3 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சிந்து வாலிபர்கள் 3 பேரையும் 28ம் தேதி ஒரு நாள், காவலில் எடுக்க அனுமதி அளித்தார். இதையடுத்து அவர்களை பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மறுநாள் 4 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய கருப்பசாமி, காளீஸ்வரன், குணா ஆகியோருக்கு எதிராக கோவை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சிந்து முன்னிலையில் டிசம்பர் 2ம் தேதி முதல்கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், வழக்கு விசாரணை கூடுதல் மகிளா கோர்ட்டில் இருந்து மகிளா கோர்ட்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி 3 பேரும் கூடுதல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி சிந்து வழக்கு விசாரணையானது மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்து, அதற்கான கையொப்பத்தை பெற்று கொண்டார். தொடர்ந்து கூடுதல் மகிளா கோர்ட்டில் இருந்து வழக்கு விசாரணை ஆவணங்கள் மாவட்ட கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஆவணங்களை மாவட்ட நீதிபதி விஜயா விசாரணை செய்தார்.
அதற்காக கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து மாவட்ட நீதிபதி விசாரித்து வழக்கை மகிளா கோர்ட்டுக்கு மாற்றினார். இதையடுத்து ஜனவரி 2ம் தேதி முதல் பாலியல் பலத்கார வழக்கை மகிளா கோர்ட் நீதிபதி சுந்தர்ராஜ் விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே போலீசார் 2வது கட்டமாக 3 பேர் மீதும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட தடயங்கள், டிஎன்ஏ சோதனை, ஆண்மை பரிசோதனை முடிவுகளை பெற்று கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு 350 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. நீதிபதி, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, ஆண் நண்பர், கைது செய்யப்பட்ட 3 பேர், கல்லூரி மாணவியின் தாய், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், உயர் தொழில்நுட்ப பரிசோதனை அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட மொத்தம் 72 பேரிடம் கடந்த 6ம் தேதி முதல் சாட்சி விசாரணை நடத்தினார்.
கடந்த பிப்ரவரி 23ம் தேதி அனைத்து சாட்சி விசாரணையும் நிறைவடைந்தது. பல கட்ட விசாரணை, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மார்ச் 7ம் தேதி (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சுந்தரராஜ் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று மதியம் 1.30 மணிக்கு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற கதவுகள் அடைக்கப்பட்டு 2 மணியளவில் நீதிபதி சுந்தரராஜ் 3 வாலிபர்களையும் குற்றவாளிகள் என அறிவித்தார். அதன்பின், 3.45 மணியளவில் கதவுகள் திறக்கப்பட்டு 3 வாலிபர்களுக்கும் வழங்கப்பட்ட தண்டனை விவரங்களை நீதிபதி வாசித்தார். 70 (1) சட்டப்பிரிவின் படி (கூட்டு பாலியல் பலாத்காரம்) வாழ்நாள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சமும், அவரது நண்பருக்கு ரூ. 2 லட்சமும் நிவாரணம் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
* 126 நாட்களில் அதிரடி தீர்ப்பு
மாணவி பாலியல் வழக்கில் போலீசார் 3ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அன்று இரவே 3 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். முதலில் ஜேஎம் 2 கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது. பின்னர், பெண் சமந்தப்பட்ட வழக்கு என்பதால் கூடுதல் மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து முக்கிய வழக்கு என்பதால் மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு கடந்த 4 மாதங்களில், அதாவது 126 நாட்களில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி -அரசு வக்கீல் ஜிஷா பேட்டி
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அரசு தரப்பு வக்கீல் ஜிஷா அளித்த பேட்டி: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். சம்பவத்தன்று இரவு 10:45 மணி முதல் 2 மணி வரை அவர்கள் அங்கு இருந்ததாக கூறப்பட்ட தகவல்கள் தவறானவை என சி.டி.ஆர் மற்றும் 100-க்கு அழைத்த நேரத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் மிகக் குறுகிய காலத்தில் சுமார் 4 மாதங்கள் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த காவல் துறையினரின் புலனாய்வுத் திறனை நீதிபதி பாராட்டினார். சமூக வலைதளங்களில் இந்த வழக்கு குறித்து பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த போதிலும், சட்டப் போராட்டத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்தது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* கடும் தண்டனை பெற்று தரப்படும் கமிஷனர் கண்ணன் பேட்டி
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் அளித்த பேட்டி: பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தவறு செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்று தரப்படும். பெண்கள் பாதுகாப்பில் கோவை 2வது இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புக்காக 58 டூ-வீலர் பேட்ரோல், 4 சக்கர ரோந்து வாகனம் 20 செயல்பாட்டில் உள்ளது. கடந்த 10 ஆண்டில் எந்த இடத்தில் குற்றம் அதிகம் நடந்துள்ளது என ஹாட் ஸ்பாட் பகுதிகளை கண்டறிந்து தீவிரமாக கண்காணிக்கிறோம். 28 பேரை 6 மாதத்தில் நகரை விட்டு வெளியே அனுப்பி உள்ளோம் என்றார்.
