×

பெண் இனத்தின் மாண்பு காக்க சம நீதியும், சம உரிமையும் கிடைக்க உறுதி கொள்வோம்: தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகள்

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ஒன்றிய பாஜ ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான பாகுபாடு, வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அவர்களுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் நல்ல சூழல் உருவாக வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட்): பெண்கள் விடுதலை இல்லாமல் சமூக விடுதலை சாத்தியமில்லை. பெண்களின் உரிமைகள், சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை காக்கும் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். பெண்கள் மீதான பொருளாதாரச் சுரண்டலுக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப சர்வதேச பெண்கள் தினத்தில் உறுதி ஏற்போம்.

வைகோ (மதிமுக): அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமையிலான தி.மு.க அரசு தமிழ்நாட்டில் மகளிர் விடுதலைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆண்களுக்கு நிகராக சொத்துரிமை, அரசு பணிகளில் வேலைவாய்ப்பு உரிமை, கல்வி கற்க உதவி, உள்ளாட்சி நிர்வாகங்களில் பங்கு என பல்வேறு முற்போக்கு திட்டங்களை திராவிட இயக்க அரசுகள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி வருகின்றன. நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிப்பது இன்னும் எட்டா கனியாகவே உள்ளது. அது சட்டமாக்கப்பட வேண்டும். இத்தகைய உணர்வுகளோடு பெண் இனத்தின் மாண்பு காக்க நம் சகோதரிகளுக்கு சமநீதியும், சம உரிமையும் கிடைக்க உறுதி கொள்வோம்.

அன்புமணி (பாமக): உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்கு தான் போர்க்குணம் அதிகம் ஆகும். சங்க காலத்திலிருந்தே தமிழ்நாட்டு பெண்கள் படைப்புத்திறன் மிக்கவர்களாகவும், முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். இப்போது கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். அதற்கு அவர்களின் அறிவும், திறனும் தான் காரணம்.

ராமதாஸ் (பாமக): பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே அரசின் நோக்கம் என்று மேடைகளில் பேசிக்கொண்டே அந்தப் பெண்களின் கணவன்மார்களையும், மகன்களையும் மதுவுக்கு அடிமையாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதும் முரண்பாடுகளின் உச்சம். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அரசு வழங்கும் வெறும் வாழ்த்துகளோ அல்லது சில விருதுகளோ அவர்களின் வாழ்வை மேம்படுத்தாது. தமிழகப் பெண்களுக்கு அரசு வழங்கக்கூடிய ஆகச்சிறந்த, உண்மையான பரிசு \\”பூரண மதுவிலக்கு\\” மட்டுமே.

உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும். மதுவால் கணவனை இழந்த இளம் கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை விட, அவர்களின் தாலி பாக்கியத்திற்கும், குடும்ப அமைதிக்கும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே உண்மையான சமூகநீதியாகும். வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும். எங்களின் பெண் தெய்வங்களுக்கு இதயம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): பெண்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை கவனிப்பதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உதவிடும் வகையிலும் செயல்படுவது பெருமைக்குரியது. குறிப்பாக குடியரசுத் தலைவராக, ராணுவ வீராங்கனைகளாக, விஞ்ஞானிகளாக, விளையாட்டு வீராங்கனைகளாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். பெண்களின் உரிமைகள், சமூக-பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் பாலின சமத்துவத்தை முன்னிறுத்தியே மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும்.

எர்ணாவூர் கி,நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம்): பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடப்படும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

Tags : Women's Day ,Chennai ,Selvapperundhagai ,Congress ,BJP government ,
× RELATED மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டுள்ள...