- பாஜக
- எடப்பாடி
- பொதுச்செயலர்
- நிதீஷ் குமார்
- பீகார்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- OPS
- திருமங்கலம்
- அஇஅதிமுக
- ஆப்ஸ்...
திருமங்கலம்: பீகாரில் நிதிஷ்குமாருக்கு நடந்தது போல அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பாஜ கட்சியால் நீக்கப்படுவார் என திருமங்கலம் அருகே நடந்த ஓபிஎஸ் அணியினர் இணைப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஓபிஎஸ் தலைமையில் இயங்கிய அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழக நிர்வாகிகள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ராயபாளையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பாஜ தனக்கு நல்லது செய்யும் என்று நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. உண்மையில், பாஜ யாருக்கும் நல்லது செய்யாது. மகளிர் தினத்தை அடிப்படையாக வைத்து, இன்றைக்கு(நேற்று) சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி, மகளிருக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்கள். கடந்த 2024ம் ஆண்டு நூறு ரூபாய் குறைத்தது, தேர்தலுக்கான பம்மாத்து என்று நிரூபித்திருக்கிறார் பிரதமர் மோடி. 2024ல் கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கிறேன் என்றும், நூறு ரூபாய் குறைக்கிறேன் என்றும் சொன்னவர், இன்றைக்கு எதற்குச் சுமையை ஏற்றியிருக்கிறார்?
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகச் சொல்லிவிட்டு, வாக்குத் திருட்டு மாதிரி, அவர்களுடைய பணத்தையும் பறிப்பது நியாயமா? பாஜவைப் பொறுத்தவரைக்கும், மக்களுக்கு நல்லது செய்ய விடமாட்டார்கள். இதை உணர்ந்ததால்தான், தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத்தொகையை முடக்க நினைத்த சதியை முறியடித்து, மூன்று மாதங்களுக்கான உரிமைத்தொகையை முன்பணமாகவும், 2,000 ரூபாயை கோடைக்காலச் சிறப்பு நிதியாகவும் சேர்த்து, 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு, ஐந்தாயிரம் ரூபாயை வழங்கியிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, திராவிட மாடல் 2.0ல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்துவோம் என்றும் அறிவித்திருக்கிறேன். மக்களுக்காக பார்த்துப் பார்த்து திட்டங்களைத் தீட்டி, நன்மைகள் செய்து, மக்களுக்கு கொடுத்தால், அதுதான், திமுக மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்தால் அது பாஜ. இப்படி, யாருக்குமே நன்மை செய்யாத பாஜவா அதிமுகவுக்கு நன்மை செய்யப் போகிறது? அதிமுகவின் ரத்தத்தைத்தான் உறிஞ்சி எடுக்கும்.
இதில், பழனிசாமிக்கு ஏதாவது ‘டவுட்’ இருந்தால், இதற்காகவாவது அவர் கொஞ்சம் தலையைத் தூக்கி, பீகாரில் நடப்பதைப் பார்க்க வேண்டும். பத்து முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரையே பாஜ பந்தாடிவிட்டது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் நடக்கும் என்டிஏ ஆட்சியில், அக்கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, இன்றைக்கு மாநிலங்களவை எம்பி ஆகப்போகிறார். அவருக்கு பதிலாக, பாஜ சார்பில், புதிய முதலமைச்சர் பொறுப்பேற்க இருப்பதாகத் தகவல்கள் ஆதாரத்துடன் வருகிறது.
இன்றைக்கு நிதிஷ்குமாருக்கு ஏற்பட்டிருக்கும் கதிதான், நாளைக்கு பழனிசாமிக்கும் நடக்கும். அதற்கு அவர் முதலில் வெற்றி பெற வேண்டுமே என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. எனக்குக் கிடைத்த தகவல்படி, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக ஆல்-ரெடி வேறு ஒருவரைப் பொதுச்செயலாளராக பாஜ தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. பழனிசாமியை இந்தத் தேர்தல் வரைக்கும்தான் பாஜ வைத்திருக்கும். பிறகு, அவரையே தூக்கி விடுவார்கள்.
ஒருவேளை, பாஜ கூட கூட்டணி வைக்க மறுத்திருந்தால், இப்போதே மாற்றி இருப்பார்கள். அந்தளவுக்கு, அதிமுக பாஜவின் கண்ட்ரோலுக்கு போய்விட்டது. அதிமுக தொண்டர்களின் வாக்குகளை வாங்கி, தன்னை வளர்த்துக் கொள்ள பாஜ போட்டிருக்கும் திட்டத்திற்கு, துணை போய்க் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு நடந்தது போன்று, பீகாரில், நிதிஷ்குமாருக்கு நடப்பது போன்றுதான், தமிழ்நாட்டில் பழனிசாமிக்கு நடக்கப் போகிறது. நான் உறுதியாக சொல்கிறேன்… வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று, மீண்டும் நாம் ஆட்சி அமைப்போம். இவ்வாறு பேசினார். உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் நன்றி கூறினார்.
* நான் வேண்டாம்னு கூறியும் ஆளுநரை மாற்றியது ஏன்?
மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘வரும் தேர்தலில் திமுக.தான் வெற்றி பெறப் போகிறது என்று பாஜவே நினைக்கிறது. அதனால்தான், நம்முடைய பிரசார பீரங்கியாக இருந்த ஆளுநர் ரவியை திடீரென மாற்றிவிட்டார்கள். ஸ்டாலினுக்கு மறுபடியும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமே என்று விரக்தியில், அவர் கிளம்பிவிட்டார்…
ஒன்றிய பாஜ அரசைக் கேட்கிறேன். எலக்ஷன் முடியும் வரைக்கும், ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என்று நான் எத்தனை முறை கோரிக்கை வைத்திருக்கிறேன். பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் எத்தனை முறை கோரிக்கை வைத்திருக்கிறேன். இதிலே கூட எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர மாட்டீர்களா? இருந்தாலும், ஆளுநர் ரவியை மாற்றினாலும், நம்முடைய வெற்றியை இன்றைக்கு உறுதி செய்திருக்கிறார்கள்’’ என்றார்.
* ஓபிஎஸ்னா விசுவாசம் பழனிசாமினா துரோகம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘ஓபிஎஸ் என்றால் ஞாபகத்திற்கு வருகின்ற ஒரே சொல் ‘விசுவாசம்’. மறைந்த ஜெயலலிதா, முதலமைச்சர் இருக்கையில், ஓபிஎஸ்சை 2 முறை முதல்வராக அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைத்த அரசாட்சியை, எந்தத் துரோகமும் இல்லாமல், திருப்பி ஒப்படைத்த நேர்மைக்கு சொந்தக்காரர்தான் ஓபிஎஸ். விசுவாசத்துக்கு ஓபிஎஸ். என்றால், துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர் பழனிசாமி.
கூவத்தூரில், சசிகலா காலில் ஊர்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சராகி விட்டு, அவரையே, “நீ எனக்குப் பதவி பெற்று தந்தாயா?” என்று ஒருமையில் கேட்டவர்தான் பழனிசாமி. பழனிசாமியை பொறுத்தவரைக்கும், தன்னை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்வார். அவருடைய உச்சகட்ட துரோகம் என்ன தெரியுமா? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தையே இன்றைக்கு அடமானம் வைத்திருக்கிறார் பழனிசாமி’’ என்றார்.
* எம்ஜிஆருக்கு நானும் ரசிகன்
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘எம்ஜிஆருக்கு நீங்கள் மட்டுமல்ல; நானும் ரசிகன்தான். திமுக எம்ஜிஆரை வளர்த்தது. அவரும் திமுகவை வளர்த்தார். கலைஞரைத் தலைவராக ஏற்றுக் கொண்டார். அப்படிப்பட்ட தாய்க்கழகத்திற்கு – தாயின் மடிக்கு நீங்கள் எல்லாம் திரும்பி இருக்கிறீர்கள். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்யப்போனதால், உரிமைக்குரல் எழுப்பித் தாய்க்கழகத்திற்குத் திரும்பி இருக்கிறீர்கள்’’ என்றார்.
* ‘அதிமுகவுக்கு தொடர் தோல்விதான் கிடைக்கும்’
இணைப்பு விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசியதாவது: அதிமுக எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். தொண்டர்கள்தான் தனக்கான தலைவர் பதவியை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை மாற்றி, தொண்டர்களின் உரிமைகளை பறித்தனர். எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று இல்லை. இதற்காக சட்டப்போராட்டம் நடத்தினேன். கட்சியை அவர்கள் கைப்பற்றலாம். ஆனால், வெற்றி பெற முடியாது.
அவர்களின் தோல்வி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எட்டு தோல்வி மட்டும் அல்ல, தொடர்ந்து தோல்வி தான் கிடைக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று அபகரிப்பு திமுகவாக மாறியிருக்கிறது. மாற்றப்பட்டுள்ளது. எனது தன்மானத்திற்கு கேடாக மாறியதால் தான் இன்று நான் திமுகவில் இணைந்தேன். அதிமுக தொண்டர் உரிமை கழகத்தினை அண்ணா கண்ட திமுகவில் இணைத்துள்ளேன்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் இருக்கும் என்றார் அண்ணா. அரசியல் ஞானத்தையும், ஜெயலலிதாவின் வேகத்தையும் ஒருங்கே பெற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே பாராட்டுகிறது. திராவிடமே நமது உயிர்மூச்சு. சிலருக்கு இது வெறுப்பை தந்துள்ளது. சிலாின் தூக்கத்தினையும் கெடுத்துள்ளது.
எதிரணியினரின் வெற்றிக்கு வாய்ப்பே இல்லை. முதல்வரை போன்ற ஒரு பக்குவமான தலைவரை இந்தியாவில் எங்குமே பார்க்கமுடியாது. முதல்வர் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்து கொண்டுள்ளார். மக்கள் நலத்திட்டங்களையும் இந்தியாவிலேயே தலை சிறந்த முதல்வராகவும் திகழ்கிறார். 2வது முறையாகவும் முதல்வராக பதவி ஏற்பார். இவ்வாறு பேசினார். இணைப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வெள்ளி செங்கோல் வழங்கினார்.
