*பயணிகள் கடும் அவதி
கடத்தூர் : தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ல் மீண்டும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கடத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து பொம்மிடி, தர்மபுரி, அரூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இடம் சீரமைக்கப்பட்டது.
ஆனால், தற்போது மீண்டும் சில கடைக்காரர்கள் சாலையோரத்தில் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நிற்க கூட இடமின்றி கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், சாலையோரத்தில் கடைகள் வரிசைகட்டியுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பஸ் ஸ்டாண்டை முறையாக சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
