×

கொடநாடு கொலை வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏன் தாமதம்? என்று அரசு தரப்பு அதிகாரிகளிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி சயான் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜரானார். வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நீதிபதி முரளிதரன் கேட்டறிந்தார். ஏன் வழக்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது? என்று அரசு தரப்பு அதிகாரிகளிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது அரசு தரப்பு அதிகாரிகள், ‘‘இதுவரை 269 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குஜராத்தில் உள்ள ஆய்வகத்தில் செல்போன் தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை’’ என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

Tags : Kodanad ,Ooty ,Kotagiri ,Nilgiris district… ,
× RELATED நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில்...