இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த பின்னலாடை ஏற்றுமதியில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பு திருப்பூரில் உற்பத்தி செய்து அனுப்பப்படுகிறது. அத்தகைய பின்னலாடை உற்பத்திக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. ஆனால், அவ்வப்போது நூல் விலையில் ஏற்படும் மாற்றங்கள் பின்னலாடை உற்பத்தியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு அமெரிக்க வரி விதிப்பு அமலுக்கு வந்ததால் தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு பருத்தி இறக்குமதிக்கு இருந்த 11 சதவீத வரிக்கு விலக்கு அளித்திருந்தது. கடந்த டிசம்பர் மாதத்துடன் அது நிறைவடைந்த நிலையில் தொழில்துறையினர் கோரிக்கை வைத்தும், வரி விலக்கு கால நீட்டிப்பு செய்யப்படவில்லை. இந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை தொழில்துறையினர் எதிர்பார்த்த நிலையில் அது போன்ற எந்த சலுகைகளும் குறிப்பிடப்படவில்லை.
அந்த ஏமாற்றம் நீங்குவதற்கு முன்பாக பட்ஜெட் வெளியான மறுநாளே நூல் விலை கிலோ ரூ.7 உயர்ந்தது. இது திருப்பூர் மற்றும் மேற்கு மண்டலங்களில் உள்ள தொழில்துறையினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொழில்துறையினரின் பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அதை எல்லாம் ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
அமெரிக்கா வரி விதித்த போது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தொழில் துறையினரை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை அறிந்து அதனையும் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பினார். ஆனால், அதிமுகவின் கோட்டை என கூறப்படும் மேற்கு மண்டலங்களில் தொழில்துறையினர் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு கருத்தோ, கூட்டணியில் அங்கம் வகிப்பதால் ஒன்றிய அரசுக்கு அழுத்தமோ தராத நிலையில் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறது.
அதிமுக கூட்டணி பாசத்தால் தொழில்துறையினரின் நியாயமான கோரிக்கைகளை கூட ஒன்றிய அரசிடம் வலியுறுத்தாத பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மீது தொழில்துறையினர் நம்பிக்கையை இழந்துள்ளனர். நூல் விலை மட்டுமல்லாது, அமெரிக்க வரி விதிப்பு விவகாரம், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் ரத்து, பட்ஜெட்டில் தமிழகமும், தமிழக தொழில்துறையும் புறக்கணிப்பு, மின் கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது, திருப்பூரின் லட்சக்கணக்கான தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை அமல்படுத்தியது என எந்த விவகாரத்திலும் குரல் கொடுக்காமல் மவுனம் காக்கும் அதிமுக மேற்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை இழந்து வருகிறது.
தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூர் வந்து தொழில்துறையினரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டுச்சென்ற அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் அதுகுறித்து ஒன்றிய அரசுக்கு தனது அழுத்தத்தை வழங்காதது தொழில் துறையினரிடையே மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, கூட்டணிக்குள் சிக்கல் என்பதற்காக கடந்த 5 மாதத்தில் பலமுறை டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டலத்தின் ஜவுளித்துறை குறித்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் கேட்டுப்பெறக்கூடிய இடத்தில் இருந்தும் அமைதி காக்கும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொழில் மற்றும் தொழிலாளர் நலனில் அக்கறை கொள்ளாமல் பாஜ பக்கம் இருப்பது திருப்பூர் மாவட்டத்தில் தொழில்துறை மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதிமுகவின் இத்தகைய செயல்பாடுகள் வரும் தேர்தலில் அதிமுகவின் கோட்டை எனக் கூறப்படும் மேற்கு மண்டலத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
