×

நியோமேக்ஸ் சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டோருக்கு உரிய தொகை: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி பாராட்டு

மதுரை: நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு உரிய தொகைகள் வழங்கப்படுமென தெரிவித்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. மதுரை, எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கானோரிடம் பல நூறு கோடி முதலீட்டை வசூலித்து மோசடி செய்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதன் இயக்குநர்கள் பலரை கைது செய்தனர். இதில் பெரும்பாலானோர் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த மோசடியை சிபிஐ விசாரிக்கக்கோரியும், நிதி நிறுவன சொத்துக்களை பறிமுதல் ெசய்யக் கோரியும் பல்வேறு மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, பறிமுதல் செய்யப்பட்ட நியோேமேக்ஸ் நிறுவன சொத்துக்களான கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, ‘‘29 இடங்களில் உள்ள 10,158 காலி மனைகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலங்களை முதல் கட்டமாக விற்பனை செய்ய உள்ளோம். இந்த நிலங்களை யார் வேண்டுமானாலும் முறைப்படி பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம். அதற்கான பதிவு வரும் 9ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் ஆன்லைனில் மூலம் இடம் வாங்க விரும்புபவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அதிக விலைக்கு நிலங்களை விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகைகளை பெற்றுக் கொடுப்பதுதான் அரசின் நோக்கம். ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மார்ச் 17 முதல் மே 14 வரை தொடர்ந்து விற்பனை செய்து பதிவு செய்து கொடுக்கப்படும்’’ என்றார். அப்போது நீதிபதி, நீதிமன்றத்தின் நோக்கமும் இதுதான். நிலங்களை அதிக விலைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு விற்பனை செய்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். நிலங்களை யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

அதில் எந்த உள்நோக்கமும் இருக்கக் கூடாது. எனவே, இது குறித்து மக்களிடத்தில் உரிய முறையில் தெரிவித்து முறையாக விற்பனை செய்து கொள்ளலாம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகள். எவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்வது என்பது குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சிறிய வீடியோக்களை வெளியிட வேண்டும். இதே போல் தொடர்ந்து செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags : Neomax ,Tamil Nadu government ,Madurai ,High Court ,Neomax Finance Company ,S.S. Colony, Madurai ,Tamil Nadu… ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக...