×

நம்பி வாங்க… உங்களுக்கான அடையாளத்தை தர நாங்க தயார்!

நன்றி குங்குமம் தோழி

‘‘எங்க அப்பா விவசாயிதான். அம்மா வங்கியில் நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார். என்னுடைய தாத்தா ஆடிட்டர், டிரேடிங்கும் செய்திட்டு இருந்தார். அவங்க வேலை செய்வதைப் பார்த்துதான் எனக்கு பிசினஸ் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. மேலும், நான் செய்யப் போகும் தொழில் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கணும்னு நினைச்சேன்’’ என்கிறார் மதுரையை சேர்ந்த அபிராமி. இவர் சுவை ஓவியம் என்ற பெயரில் கேக் தயாரிப்பு மட்டுமில்லாமல் பல கைவினைப் பொருட்களை தயாரித்து அதற்கான பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே எது செய்தாலும் புதுமையா இருக்கணும்னு நினைப்பேன். நான் சாப்பிடும் சாப்பாட்டில் கூட சுவை நன்றாக இருக்க வேண்டும் என்று விருப்பப் படுவேன். அதே போல் எனக்கு கிரியேட்டிவிட்டியும் கொஞ்சம் அதிகம். பள்ளிப் படிப்பு முடிச்சிட்டு கல்லூரியில் சேர்ந்த பிறகு என்னுடைய கல்லூரிப் பேராசிரியர்கள் எனக்கு ரொம்பவே சப்ேபார்டிவ்வா இருந்தாங்க. நான் பி.காம் படிச்சதால், படிப்பு சார்ந்து மட்டுமில்லாமல், அதையும் தாண்டி ஒரு நிகழ்வினை எவ்வாறு நடத்த வேண்டும், அதன் செலவுக்கான ஸ்பான்சர்களை எப்படி பெற வேண்டும் என்றெல்லாம் அவங்க எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அதன் பிறகு MBA முடிச்சேன்’’ என்றவர் படிப்பு சார்ந்து மட்டுமில்லாமல், கலை சார்ந்த விஷயங்களிலும் கைதேர்ந்தவர்.

‘‘என்னுடைய அம்மா நல்லா பெயின்டிங் செய்வாங்க. அவங்களை பார்த்து நானும் பெயின்டிங் செய்ய ஆரம்பித்தேன். கலையுடன் விளையாட்டுகளிலும் எனக்கு ஆர்வம் அதிகம். பள்ளியில் நடைபெறும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெற்று பரிசும் வென்றிருக்கிறேன். பரதமும் பயின்று அரங்கேற்றமும் செய்திருக்கேன். இதைத் தவிர கைவினை சார்ந்த போட்டியில் பங்கு பெற்று பரிசுகளும் பெற்றிருக்கிறேன். என்னுடைய அனைத்து விஷயத்திற்கும் அம்மா ரொம்பவே சப்போர்டிவ்வா இருப்பாங்க.

எனக்கு ஃபைன் ஆர்ட்ஸ் படிக்க விருப்பம். ஆனால், என் தாத்தா நான் ஆடிட்டராகணும்னு விரும்பினார். அதனால்தான் பி.காம் படிச்சேன். சி.ஏவும் எழுதினேன். ஆனால், என்னால தேர்ச்சிப் பெற முடியல. அதன் பிறகு ஃபைன் ஆர்ட்ஸில் டிப்ளமோ படிச்சேன். அது முழுக்க முழுக்க இந்திய கலாச்சாரம் குறித்த ஓவியப் பயிற்சி. அதில் தஞ்சாவூர் பெயின்டிங் மேல் எனக்கு ஈர்ப்பு வந்தது. அதை செய்ய ஆரம்பித்து விற்பனையும் செய்து வந்தேன்.

அப்போது கோவிட் பாதிப்பு ஏற்பட்டு, வீட்டில் இருந்த நேரம். என் அத்தைகள் ேபக்கிங் செய்வாங்க. வீட்டில் சும்மா இருப்பதற்கு பேக்கிங் செய்யலாம்னு அவங்களிடம் கற்றுக்ெகாண்டு செய்ய ஆரம்பித்தேன். அதை முறைப்படி தெரிந்து கொள்ள பயிற்சியும் மேற்கொண்டேன். ஆனால், அங்கு அவங்க எனக்கு முறையாக கற்றுத் தரவில்லை. காசுதான் விரயமாச்சு. அங்கு கற்றுக் கொண்ட அடிப்படை விஷயங்களை வைத்து நானே டிரையல் அண்ட் எரர் முறையில் ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். வீட்டில் நாம் சமைக்கும் உணவும் பேக்கிங்கிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதுன்னு புரிந்தது.

அதன் பிறகு என் உறவினர் மூலம் வேறு ஒரு இடத்தில் பேக்கிங் பயிற்சியினை மேற்கொண்ேடன். அங்குதான் எனக்கு பேக்கிங் குறித்து உண்மையான புரிதல் கிடைத்தது. அவங்க ஒவ்வொரு விஷயங்களையும் மிகவும் நுணுக்கமாக சொல்லிக் கொடுத்தாங்க. தொடர்ந்து ஆன்லைனில் அமெரிக்காவில் உள்ள ஒரு பேஸ்டரி செஃப்பிடம் பேஸ்டரிகள் செய்வதற்கான பயிற்சி மேற்கொண்டேன்’’ என்றவர், முழுக்க முழுக்க ஆர்கானிக் முறைகளில் உணவுப் பொருட்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

‘‘பொதுவாக மைதாவில் கேக் செய்வது வழக்கம். ஆனால், மைதா உடலுக்கு கெடுதல் என்பதால், மைதாவிற்கு மாற்றாக கோதுமையினை பயன்படுத்த ஆரம்பித்தேன். முதலில் நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்தேன். நன்றாக இருப்பதாக சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து சிறுதானியங்களில் உணவுகளை தயாரிக்க துவங்கினேன். ஆனால் நான் நினைத்தது போல் என்னால் அதில் அவ்வளவு எளிதாக தயாரிக்க முடியவில்ைல. கிட்டத்தட்ட 500 செய்முறைக்கு பிறகுதான் என்னால் சிறுதானியங்களில் சரியான முறையில் கேக்கினை தயாரிக்க முடிந்தது.

அப்போதுதான் இதை ஏன் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. ஆன்லைன் முறையில் பயிற்சியினை துவங்கினேன். இதற்கிடையில் சிறுதானியங்கள் கொண்டு கேக் தவிர குக்கீஸ், டெசர்ட், ஸ்னாக்ஸ் என ஒவ்வொரு உணவுகளாக தயாரிக்க ஆரம்பித்தோம். தற்போது 100க்கும் மேற்பட்ட உணவுகளை மைதாவில் மட்டுமில்லை சிறுதானியங்களிலும் நாங்க தயாரித்து வருகிறோம்’’ என்று கூறும் அபிராமி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘எனக்கு கூட்டமாக சேர்த்து பயிற்சி அளிப்பதில் விருப்பமில்லை. ஒருவருக்கு சொல்லிக் கொடுத்தாலும் முழுமையான பயிற்சி அளிக்க வேண்டும். அதனால்தான் ஆன்லைன் பயிற்சி என்றாலும், தனிப்பட்ட நபருக்கு பயிற்சி அளிக்கிறேன். ஆன்லைனில் பயிற்சி பெற்றோம்… சான்றிதழ் வாங்கினோம் என்பதற்கு இங்கு இடம் இல்லை. முறையாக தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே சான்றிதழ் தருகிறோம். என்னைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தை யார் வேண்டும் என்றாலும் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால், நாங்க கற்றுக் கொடுத்ததை தன்னம்பிக்கையோடு அவர்கள் செய்ய வேண்டும். என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் புதுப்புது ரெசிபிக்களை உருவாக்கி அவர்களின் சிக்னேச்சர் உணவாகவே விற்பனை செய்கிறார்கள். என்னுடைய மாணவர்கள் முழுமையான திறமையுடன்தான் வெளியே போகணும் என்பதில் நான் மிகவும் உறுதியா இருக்கிறேன்’’ என்றவர், கேக் பேக்கிங் மட்டுமில்லாமல் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்தும் பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘பேக்கிங் ஒரு பக்கம் இருந்தாலும், கைவினைப் பொருட்கள் சார்ந்த பயிற்சிகளும் மறுபக்கம் நான் அளித்து வருகிறேன். அதில் தற்போது இப்ப என்ன டிரண்டிங்கா இருக்கோ அதற்கான பயிற்சியும் தருகிறோம். சிலர் 25வது பிறந்த நாளுக்கு 25 பொருட்கள் பரிசாக கொடுக்க நினைப்பார்கள். அதனை நாங்க முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தருகிறோம். மேலும், சங்கி யார்ன் பைகள், செட்டிநாடு மசாலாப் பொருட்கள், இடியாப்பம், புட்டு மாவு போன்ற ரெடிமிக்ஸ் மற்றும் மில்லட் ஸ்னாக்ஸ் உணவுகள் எல்லாம் செய்து தருகிறோம். உணவுகள் பொறுத்தவரை ஆர்டரின் பேரில்தான் செய்கிறோம்.

சிலர் விழாக்களுக்கு குழிப்பணியாரம் போன்ற உணவுகள் வேண்டும் என்று கேட்கும் போது அதனை நாங்க செய்து டெலிவரி செய்கிறோம். நம்ம வீட்டிற்கு எப்படி பார்த்து பார்த்து செய்வோமோ அதே போல்தான் நான் என் வாடிக்கையாளர்களுக்கும் ஒவ்வொரு உணவினையும் செய்து தருகிறேன். கேக் பொறுத்தவரை நாங்க எந்தவித ரசாயனங்கள் மற்றும் ஆர்டிபிஷியல் நிறங்கள் பயன்படுத்துவதில்லை. ஸ்ட்ராபெர்ரி என்றால் அந்தப் பழத்தில் இருந்து சாறு எடுத்துதான் இதில் பயன்படுத்துவோம். மேலும், காம்பவுண்ட் சாக்லேட்டுகளை நாங்க உபயோகிப்பதில்லை.

அதனால் எங்களின் அனைத்து கேக்குகளும் பிரிமியம் தரத்தை சேர்ந்தவை. என்னுடைய கனவே பல பெண் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்பது தான். அவர்கள் எங்களை நம்பி வந்தால் போதும், நாங்க அவர்களுக்கு ஒரு முழு கைடாக செயல்பட்டு அவர்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தி தர தயாராக இருக்கிறோம். இந்த துறையில் உள்ள புதிய அப்டேட்களை நாங்க செய்து கொண்டே இருக்கிறோம்.

என்னுடைய பயிற்சி மையம் ஒரு ஸ்கில் டிரையினிங் மையமா அமைக்க வேண்டும். எல்லாவற்றையும் விட பயிற்சி மட்டுமே கொடுக்காமல், அவர்கள் எவ்வாறு பிசினஸை எடுத்து நடத்தணும், லாபம் பார்ப்பது, எங்கு ெபாருட்கள் வாங்குவது, மார்க்கெட்டிங் செய்யும் முறை என அனைத்தும் சொல்லித் தரணும். சொல்லப் போனால் குழந்தைக்கு எவ்வாறு ஒவ்வொரு விஷயங்களும் சொல்லிக் கொடுக்கிறோமோ அதே போல் என் பயிற்சிக்கு வரும் பெண்களுக்கும் தரவேண்டும்’’ என்றார் அபிராமி.

தொகுப்பு: ஷன்மதி

Tags : Kumkum ,
× RELATED உலகின் சிறந்த ஆசிரியர் விருது!