×

அரையிறுதியில் த்ரில் வெற்றி; பைனலில் இந்தியா: கடைசி வரை போராடியும் தோற்றது இங்கி.

மும்பை: உலகக் கோப்பை டி20 தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பெத்தேலின் அதிரடி சதத்தால் கடைசி வரை போராடிய இங்கிலாந்து தோல்வி அடைந்தது. உலகக் கோப்பை டி20 தொடரில். நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தி, நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2வது அரையிறுதிப் போட்டி, மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். துவக்கம் முதல் தடுமாறிக் கொண்டிருந்த அபிஷேக் சர்மா (9 ரன்), வில் ஜாக்ஸ் வீசிய 2வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷண், சஞ்சு சாம்சன் இணை சேர்ந்து இங்கிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இவர்களின் அதிரடியால் இந்திய அணி, 27 பந்துகளில் அரை சதம், 51 பந்துகளில் 100 ரன்னை எட்டியது. அடில் ரஷீத் வீசிய 10வது ஓவரில் வில் ஜாக்சிடம் கேட்ச் தந்து இஷான் கிஷண் (18 பந்து, 2 சிக்சர், 4 பவுண்டரி, 39 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின் சிவம் தூபே, சஞ்சு சாம்சன் சேர்ந்து தொடர்ந்து ரன் வேட்டையாடினர். இந்த இணை, 43 ரன்கள் குவித்த நிலையில், 14வது ஓவரை வீசிய வில் ஜாக்ஸ் பந்தில் பில் சால்ட்டிடம் கேட்ச் தந்து சஞ்சு சாம்சன் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர், 42 பந்துகளில் 7 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசினார்.

அதன் பின், களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், 6 பந்துகளில் 11 ரன் மட்டும் எடுத்து அவுட்டாகி நடையை கட்டினார். , சிவம் தூபேவுடன், ஹர்திக் பாண்ட்யா இணை சேர்ந்து இந்திய அணியின் ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். அதனால், 16.1 ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டிப் பிடித்தது. அதன் பின், 18வது ஒவரில் சிவம் தூபே (25 பந்து, 4 சிக்சர், 1 பவுண்டரி, 43 ரன்) எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

பின்னர், திலக் வர்மா, ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசி (7 பந்து, 21 ரன்) ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில், ஹர்திக் பாண்ட்யா ஆக்ரோஷமாக 2 சிக்சர்களை விளாசி, 5வது பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா, 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன் குவித்தது. அக்சர் படேல் 2 ரன்னுடனும், வருண் சக்ரவர்த்தி ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத், வில் ஜாக்ஸ் தலா 2, ஜோப்ரா ஆர்ச்சர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அதையடுத்து, 254 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் சால்ட் (5), பட்லர் (25), புரூக் (7), பான்டன் (17) விக்கெட்டை மளமளவென இழந்தது. 95 ரன்னில் 4 விக்கெட் என்ற நிலையில் ஜேக்கப் பெத்தேல் மிரட்டல் ஆட்டம் ஆடினார். இவருக்கு வில் ஜேக்ஸ் நல்ல ஒத்துழைப்பு தந்து 35 ரன் எடுத்தார். பெத்தேல் 45 ரன்னில் சதம் விளாசி ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்ப முயன்றார். இதனால் கடைசி ஓவர் வரை போட்டி விறுவிறுப்பாக சென்றது.

பாண்ட்யாவின் 19வது ஓவரில் சாம் கரண் (18) ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன் தேவை என்ற நிலையில், துபே வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் பெத்தேல் (105 ரன், 48 பந்து, 7 சிக்ஸ், 8 பவுண்டரி) ரன் அவுட்டானார். இதனால் 20 ஓவரில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோற்றது. கடைசி ஓவரில் 3 சிக்சர் விளாசிய ஆர்ச்சர் 4 பந்தில் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

* பவர்பிளே ஆட்டத்தில் பவர் காட்டிய சாம்சன்
உலகக் கோப்பை டி20 லீக் சுற்றுப் போட்டிகளில் சரிவர ரன் குவிக்க முடியாமல் கடும் விமர்சனத்துக்கு ஆளான சஞ்சு சாம்சன், வெஸ்ட் இண்டீசுடன் நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் விஸ்வரூபம் எடுத்து அணிக்கு வெற்றி பெற்றுத் தந்ததோடு, செமிபைனலில் இந்தியா நுழைய முக்கிய காரணியாக திகழ்ந்தார். இந்நிலையில், நேற்று நடந்த செமிபைனல் போட்டியில் சக துவக்க வீரர் அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டாகி மோசமான துவக்கத்தை தந்தார்.

இருப்பினும், இம்முறையும் சஞ்சு சாம்சன் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது வல்லமையை பறைசாற்றினார். அவரது அதிரடியால் பவர்பிளேயில் ஆடப்பட்ட 6 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட் மட்டும் இழந்து 67 ரன் குவித்து வலுவான நிலையை எட்டியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன், 26 பந்துகளில் அரை சதத்தை எட்டி தலை நிமிர்ந்தார்.

* கேட்ச் தவறவிட்ட ஹேரி புரூக்
நேற்றைய போட்டியின்போது, வில் ஜாக்ஸ் வீசிய 2வது ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா அவுட்டான பின், 3வது ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய சஞ்சு சாம்சன் அடுத்த பந்தை தூக்கியடித்தார். அந்த பந்து, இங்கிலாந்து கேப்டன் ஹேரி புரூக் கைகளுக்கு நேராக சென்றது.

ஆனால், அவரது விரல்களில் பட்டு எகிறிய பந்து கீழே விழ, சாம்சனின் விக்கெட் தப்பித்தது. அப்போது அவரது ஸ்கோர் 15 மட்டுமே. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் அதன் பின் அதிரடியாக ஆடி ரன் குவித்து, இந்திய அணியின் ஸ்கோர் கணிசமாக உயர வழிவகுத்தார்.

Tags : India ,England ,Mumbai ,World Cup T20 ,Bethel ,
× RELATED டி20 உலகக்கோப்பை அரையிறுதி:...