சென்னை: வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே புதிதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பறக்கும் ரயில் தடத்தில் டெல்லி தலைமை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக் குமார் கார்க் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையே புதிதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பறக்கும் ரயில் தடத்தில் டெல்லி தலைமை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக் குமார் கார்க் நேற்று சட்டப்பூர்வமான ஆய்வு மேற்கொண்டார்.
1989ம் ஆண்டு ரயில்வே சட்டத்தின் கீழ், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் புதிய ரயில் பாதையை திறப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகளின்படி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் ஒரு பகுதியாக, பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை மோட்டார் டிராலி மூலம் விரிவான சோதனை நடத்தப்பட்டது. இதில் தண்டவாள அமைப்பு, ஜல்லிகளின் அளவு, சமன்பாடு, சரிவுகள் மற்றும் பயணத் தரம் ஆகியவை ஆராயப்பட்டன.
மேலும், மேம்பாலக் கட்டமைப்புகள், மின்சார வழித்தடங்கள், சிக்னல் மற்றும் இன்டர்லாக்கிங் அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு இணங்க இருப்பதை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து ஓஎம்எஸ்-2000 தடம் பதிவு செய்யும் கருவி பொருத்தப்பட்ட 9 பெட்டிகளைக் கொண்ட ஏசி-இஎம்யூ ரயிலை பயன்படுத்தி இரு வழித்தடங்களிலும் வேக சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.
செயல்பாட்டு நிலைகளில் ரயிலின் அதிர்வுத் தன்மைகள், பிரேக் பிடிக்கும் திறன், தண்டவாளத்தின் வடிவியல், சிக்னல்களின் தெரிவுநிலை மற்றும் அமைப்புகளின் ஒத்திசைவு ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களில் அவற்றின் கட்டமைப்பு உறுதித்தன்மை, பயணிகள் நடமாடும் வசதி மற்றும் அணுகல் அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.
பரங்கிமலையில், எம்ஆர்டிஎஸ் புறநகர் ரயில் சேவைகள் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பரிமாற்ற ஏற்பாடுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இது நகரத்தின் ஒரு முக்கியமான பல்வகை போக்குவரத்து மையமாக அந்த நிலையத்தின் பங்கை வலுப்படுத்துகிறது.
இந்த ஆய்வின்போது, சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தேஜ் பர்த்தாப் சிங், முதன்மை நிர்வாக அதிகாரி (கட்டுமானம் தெற்கு ரயில்வே எஸ்.கே.மவுரியா, தலைமைப் பொறியாளர் (கட்டுமானம்) பி.என்.எஸ்.சலம், தலைமை தட பொறியாளர் கே.வி.ராம மெஹர், தலைமை மின் பொறியாளர் (கட்டுமானம்) சுந்தரேசன் மற்றும் சென்னை கோட்டம் மற்றும் கட்டுமானப் பிரிவின் பிற மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
