சென்னை: சென்னை பாடி ராஜா தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். அவரது மூத்த மகன் விஜயகுமார் (27), சென்னையில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, கடந்த 2022ம் ஆண்டு, தனியார் ஏஜென்சி மூலம், கம்போடியா நாட்டிற்கு சமையலராக சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு, இவரிடம் விசாவை கொடுக்காமல் தனியார் ஏஜென்சி ஏமாற்றியுள்ளது. இதையடுத்து, விஜயகுமார் பணிபுரிந்து வந்த ஓட்டலின் உரிமையாளர், விசா பெற்றுக் கொடுத்து, மாத சம்பளத்தில் அதற்கான தொகையை பிடித்தம் செய்துள்ளார்.
2 வருடம் வரை பெற்ற விசா, கடந்த வருடம் காலாவதியாகியுள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்த விஜயகுமார், சென்னையில் உள்ள தனது நண்பர்களிடம் இதுபற்றி போனில் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28ம் தேதி அதிகாலையில் மயங்கி விழுந்த விஜயகுமாரை, இவருடன் பணிபுரிந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த கோபி மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த சுஷில் குமார் ஆகியோர் மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவர் இறந்தது தெரிந்தது.
விசா இல்லாததாலும், பணம் இல்லாததாலும் அவரது உடலை சென்னை கொண்டு வர முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுகுறித்து விஜயகுமாரின் தாய் கவிதா கூறுகையில், ‘எனது கணவர் மாற்றுத்திறனாளி. அவர் பெட்டிக்கடை வைத்து அதில் கிடைக்கும் வருவாயில் நாங்கள் குடும்பம் நடத்துகிறோம். எனது இளைய மகன் மனவளர்ச்சி குன்றியர் என்பதால், அவரை நாங்கள் தான் பராமரித்து வருகிறோம்.
இந்நிலையில், குடும்ப கஷ்டத்தை சமாளிக்க, வெளிநாட்டில் பணிபுரிந்த எனது மகன் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலை சென்னை கொண்டு வருவதற்கு ரூ.7 லட்சம் செலவாகும் என தனியார் ஏஜென்சி கூறுகிறது. ஏழ்மையான எங்களது குடும்பத்தில் அவ்வளவு தொகையை செலுத்த முடியவில்லை. எனவே தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் எனது மகனின் உடலை சென்னை கொண்டு வருவதற்கு உதவி செய்ய வேண்டும்,’ என்றார்.
