×

தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வாகனத்தை கண்டதும் மிரண்டு ஓடிய காட்டு யானைகள்

 

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வாகனத்தை கண்டதும் 2 காட்டு யானைகள் மிரண்டு ஓடியது. ஈரோடு மாவட்டம், தாளவாடி மலை பகுதியில் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய தோட்டத்தில் கரும்பு, மக்காச்சோளம், வாழை, தென்னை மரங்கள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. வனத்துறை சார்பில் ஆங்காங்கே குழுக்கள் ஏற்படுத்தி விவசாயிகளுடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜீரஹள்ளி கிராமத்தில் நேற்றிரவு நுழைந்த 2 காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த விவசாய தோட்டங்களில் நடமாடியது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் 2 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தோட்டத்திலிருந்து வெளியேறிய 2 யானைகளும் அருகே உள்ள தார் சாலையில் நடமாடியது. வனத்துறையினர் வாகனத்தில் யானைகளை துரத்தும்போது வாகனத்தின் ஓட்டுநர் யானையின் அருகே சென்றதால் வாகனத்தில் இருந்த வனத்துறையினர் ‘‘கிட்ட போகாதீங்க.. கிட்ட போகாதீங்க’’ என ஓட்டுநருக்கு அறிவுறுத்தினர். வனத்துறை வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டு அச்சமடைந்த 2 காட்டு யானைகளும் வனத்தை நோக்கி மிரண்டு ஓடியது.

சோதனை சாவடியில் நடமாடிய யானை: சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் இருந்து இன்று (வியாழன்) அதிகாலை வெளியேறிய ஒற்றை காட்டு யானை, பண்ணாரி அம்மன் கோயில் அருகே உள்ள காவல்துறை சோதனைசாவடி, வனத்துறை சோதனைசாவடி, மற்றும் வட்டார போக்குவரத்து துறை சோதனைசாவடி ஆகிய பகுதிகளில் நடமாடியது. யானை நடமாட்டத்தை கண்டு சோதனைசாவடி ஊழியர்கள் அச்சமடைந்தனர். அங்கேயே சிறிது நேரம் முகாமிட்ட காட்டுயானையை வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : Thalavadi hills ,Sathyamangalam ,Erode district ,
× RELATED எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்பிய கொள்ளையன்...