×

மாநில அரசியலில் திடீர் பரபரப்பு: பீகார் முதல்வர் பதவியை கைப்பற்றும் பாஜ

 

மாநிலங்களவை எம்பியாகிறார் நிதிஷ் குமார்
மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதல்வர் பதவி

பாட்னா: பீகாரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களவை எம்பியாகிறார் நிதிஷ்குமார். அவரது மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. பீகாரில் கடந்தாண்டு நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. 123 இடங்களில் வென்றால் தனித்து ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜ கூட்டணியில் பாஜ 89 தொகுதிகளிலும், முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளிலும், ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக் ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) 19 தொகுதிகளிலும், ஒன்றிய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதிகளிலும், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மொத்தமாக பாஜ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றியது. எதிர்க்கட்சிகளான தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 25 தொகுதகிளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் பீகாரில் பாஜ கூட்டணி ஆட்சி அமைந்தது. மீண்டும் ஜேடியூ கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வரானார். இந்நிலையில்தான், நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜ சார்பில் தேசிய தலைவர் நிதின் நபின், சிவேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் நிதிஷ் குமார் கட்சி சார்பில் 2 பேர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர். அதன்படி நிதிஷ் குமார், ராம்நாத் தாகூர் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நிதிஷ் குமார், தற்போது முதல்வராக உள்ளார். அவருக்கு 75 வயது ஆகிறது. இதனால் அவர் தேசிய அரசியலை விரும்புவதாக கூறப்படுகிறது. மேலும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில்தான் இன்று பகல் 11.30 மணிக்கு நிதிஷ் குமார், மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதன் மூலம் பீகாரில் அவர் வகித்து வந்த முதல்வர் பதவியை விரைவில் ராஜினாமா செய்கிறார். 75 வயதில் 10 முறை முதல்வர் என்ற அவரது சாதனை முடிவுக்கு வருகிறது.

பீகாரில் கிட்டத்தட்ட அவரது அரசியல் முடிவுரையாகவே பார்க்கப்படுகிறது. தற்போது பீகாரில் பாஜ ஆதிக்க மையமாக மாறியுள்ளது. நிதிஷ்குமார், வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் பாஜவில் இருந்து நேரடியாக ஒருவர் முதல்வராக பதவியேற்பார். அதற்கு பதிலாக நிதிஷின் மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், பதவியேற்று 4 மாதங்களே ஆன நிலையில், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர், தனது சமூக வலைதளத்தில், ‘பீகார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக, நீங்கள் தொடர்ந்து என் மீது நம்பிக்கையையும் ஆதரவையும் வைத்துள்ளீர்கள்.

அந்த நம்பிக்கையின் பலத்தில்தான் அனைவருக்கும் முழுமையான அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறோம். உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவின் சக்தியே இன்று பீகார் வளர்ச்சி மற்றும் கண்ணியத்தின் புதிய பரிமாணத்தை முன்வைக்க உதவியது. இதற்காக, கடந்த காலங்களிலும் பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடனான எனது பந்தம் எதிர்காலத்திலும் நீடிக்கும் என்றும், வளர்ந்த பீகாரை கட்டியெழுப்ப உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எப்போதும் போல் உறுதியாக இருப்பேன். அமைக்கப்படும் புதிய அரசாங்கத்திற்கு எனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும்’ என்றார்.

Tags : BJP ,Bihar ,CM ,Nitish Kumar ,Rajya Sabha ,Nishant Kumar ,Deputy ,Patna ,Deputy CM ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட...