மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எதிரொலி: இந்திய பங்குசந்தைகள் கடும் சரிவு

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைவதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இன்று(04-03-2026) தொடக்க வர்த்தகத்தில் தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 485 புள்ளிகள் சரிந்து 24,400 புள்ளிகளுக்குக் கீழே சென்றது. தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1.723 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது 78,521 புள்ளிகளில் வர்த்தகமாகின. காலை 9:16 மணிக்கு, நிஃப்டி 485 புள்ளிகள் அல்லது 1.95% குறைந்து 24,580.45 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. சென்செக்ஸ் 78.594.94 புள்ளிகளில், 1.644 புள்ளிகள் அல்லது 2.05% சரிந்தது. இந்திய பங்குசந்தைகளில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

போர் அதிகரித்து, கச்சா எண்ணெய் உயர்ந்து வருவதால், சந்தைகள் நிச்சயமற்ற காலத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றன. இந்த மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும், அது எந்த அளவிற்கு அழிவை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாது. தனது எண்ணெய் தேவைகளில் சுமார் 85% இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியாவின் பார்வையில், உண்மையான கவலை பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அதன் விளைவுகள் ஆகும். சந்தைக் கண்ணோட்டத்தில், விரிவடையும் வர்த்தகப் பற்றாக்குறை, நாணய மதிப்பு குறைதல், அதிக விலை மற்றும் ஒருவேளை குறைந்த வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கம் உண்மையான பிரச்சினை. போர் நீண்ட காலம் நீடித்தால் மட்டுமே இந்த பயம் ஏற்படும், அது 3 முதல் 4 வாரங்களில் முடிவடைந்தால், சந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

இது போன்ற நிச்சயமற்ற காலங்களில் பீதியடைந்து சந்தையை விட்டு வெளியேறுவது சரியான செயல் அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories: