போர் பதற்றம் எதிரொலி; வார விடுமுறையில் அதிரடியாக உயர்ந்த தங்கம்: இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1800 எகிறியது

சென்னை: போர் பதற்றம் எதிரொலியாக வார விடுமுறை தினமான இன்றும் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1800 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த 3 வாரமாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தங்கம் விலை கடந்த 23ம் தேதி வாரம் தொடக்க நாள் அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 ஆகவும், 24ம் தேதி பவுனுக்கு ரூ.240, 25ம் தேதி பவுன் ரூ.320 என்றும் உயர்ந்து வந்தது. 26ம் தேதி அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் ரூ.1,19,200க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200க்கும், பவுனுக்கு ரூ.2400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,21,600க்கும் விற்பனையானது.

இதே போல வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்த அதிர்ச்சியில் இருந்து நகை வாங்குபவர்கள் மீள்வதற்குள் பிற்பகலில் தங்கம், வெள்ளி விலை மேலும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று பிற்பகலில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,550க்கும், பவுனுக்கு ரூ.2800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,24,400க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5200 உயர்ந்துள்ளது. இதே போல பிற்பகலில் வெள்ளி விலையும் அதிரடி உயர்வை சந்தித்தது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.320க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலை காலை, மாலை என நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் உயர்ந்துள்ளது. வாரம் இறுதி நாளில் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. போர் பதற்றம் நீளும் வரை தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர கூடும் என்றும் கருதப்பட்டது. அதை நிருபிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாகும். இருந்த போதிலும் இன்று காலையில் தங்கம் விலை அதிரடியாக உயந்தது. அதாவது இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775க்கும், பவுனுக்கு ரூ.1800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 26,200க்கும் விற்பனையானது.

இதன்மூலம் 2 நாட்களில் தங்கம் விலை ரூ.7,000 உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.3.25 லட்சத்துக்கு விற்பனையானது.பொதுவாக ஞாயிற்றுக்கிழமை போன்ற வார விடுமுறை நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் இருக்காது. ஆனால், தற்போது நிலவும் அசாதாரண சூழலால் இன்று விடுமுறை தினத்திலும் தங்கத்தின் விலை உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: