சென்னை: அதிமுகவிடம் 4 தொகுதிகளை எதிர்பார்கிறோம் என்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி தெரிவித்தார். புரட்சி பாரதம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் பூந்தமல்லியில் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், பஞ்சமி நிலங்களை உடனடியாக கையகப்படுத்தி வழங்க வேண்டும் என்பது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, பூவை எம்.ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்குநேரி அருகே மது போதையில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளை தேர்வு செய்து கொடுத்துள்ளோம். அதில் 4 தொகுதிகள் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அனைத்து தொகுதிகளும் திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தான் கூறியுள்ளோம். தவெகவுடன் புரட்சி பாரதம் கட்சி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இந்த முறை பூந்தமல்லி தொகுதி கிடைத்தால் போட்டியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. சசிகலா அமைப்பு தொடங்கி தேர்தலில் நிற்பதால் அதிமுக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படாது. ஏனென்றால் தென் மாவட்டங்களில் டிடிவி.தினகரனின் அமமுக கட்சி வாக்குகள் இழப்பை சரி செய்து விடும். பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பங்கீடு இலவச சலுகைகளுக்கு வழங்குவது வழக்கமாக உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் அதனை உரிய முறையில் பயன்படுத்த அழுத்தம் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
