சென்னை: அண்ணா பெயரில் இயங்கி வரும் திருத்தணி பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஏற்கனவே ‘அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்’ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்றுவரை இயங்கி வருகிறது.
இதையொட்டி புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு, அண்ணாவின் பெயரை சூட்டாமல், ‘கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்க தலைவருமான அண்ணா பெயரை புறக்கணிப்பு செய்வது, தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி. அண்ணா பெயர் மறைக்கப்பட்டு, கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதை அறிந்து பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர்.
ஏற்கனவே அண்ணா பெயரில் இயங்கிவரும் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது. கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதால் அண்ணா பெயருக்கு அவமதிப்பு ஏற்படுவதுடன், தேவையற்ற சர்ச்சையையும், பிரிவினையையும் உருவாக்கும். அதேபோல், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதிகளான கழிவறைகள், குடிநீர் வசதிகள் போன்ற பல பணிகள் நிறைவடையாத நிலையில், தேர்தலை முன்னிட்டு அவசரமாக திறப்பு விழா நடத்த துடிப்பது அரசியல் ஆதாயத்தையுமே காட்டுகிறது.
மக்களுக்கு நீண்டநாள் பயனளிக்க வேண்டிய பேருந்து நிலையத்தில் கட்டுமானத்தின் தரம், பாதுகாப்பு, கழிவுநீர் வசதிகள், பயணிகள் அமர்வு வசதிகள், போக்குவரத்து வழிகள் போன்றவை இன்னமும் ஆய்வு செய்யப்படவே இல்லை. இவையெல்லாம் முடிவதற்கு குறைந்தது ஒருமாத காலம் தேவைப்படும் நிலையில், தேர்தலை மனதில் நிறுத்தி அவசர, அவசரமாக திறக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
