×

வானில் நிகழ்ந்தது இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: இளம்சிவப்பு நிறத்தில் காட்சி அளித்த நிலவு

சென்னை: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று வானில் நிகழ்ந்தது. அப்போது, நிலவு இளம் சிவப்பு நிறத்தில் காட்சி அளித்தது. சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும்போது ஏற்படுவதாகும். அப்போது பூமி சூரிய ஒளியை சந்திரன் அடைவதை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கும் நிகழ்வே இது. பூமியின் வளிமண்டலத்தின் வழியாக ஊடுருவும் சூரிய ஒளி சிதறடிக்கப்பட்டு, அதன் சிவப்பு நிறக் கதிர்கள் மட்டும் நிலவின் மீது விழுவதால், நிலவு சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும்.

இதனால்தான் இது ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், நேற்று பிற்பகல் 3.20க்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடைந்தது. சந்திரனின் முழுமையாக இளம் சிவப்பு நிறம் மாலை 4.34 மணி முதல் மாலை 5.33 மணி வரை தோன்றியது. இந்தியாவில் அருணாச்சலபிரதேசம், அசாம் உள்ளிட்ட வட கிழக்குப் பகுதிகளில் கிரகணத்தின் காட்சி முழுமையாக தெரிந்தது. அதேநேரத்தில், தமிழகத்தில் இறுதிக் கட்டத்தில் மட்டுமே சந்திர கிரகணத்தைப் பார்க்க முடிந்தது.

வடகிழக்கு மாநிலங்களில் சூரியன் முன்கூட்டியே மறைந்துவிடுவதால் அங்கு இந்த சந்திர கிரகணம் முழுமையாக தெரிந்தது. தமிழகத்தில் சூரியன் தாமதமாக மறைவதால் இறுதிக் கட்டத்தில் மட்டுமே சந்திர கிரகணத்தைப் பார்க்க முடிந்தது. ஆனால், சென்னையில் சில இடங்களில் சற்று மேகமூட்டமாக இருந்ததால் சந்திர கிரகணம் தெளிவாக தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகணத்தையொட்டி நேற்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் காலை நேர பூஜைகள் நடத்தப்பட்டு, கோயில் நடை நேற்று மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது. சந்திர கிரகணம் முடிவடைந்த பிறகு மாலை 7 மணிக்கு மேல் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

Tags : Chennai ,Earth ,Sun ,Moon ,
× RELATED இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான்...