- துணை முதலமைச்சர்
- நான் முதல்வன் திட்ட பல்கலைக்கழக செயல்பாட்டு மையங்கள்
- சென்னை
- உதயநிதி ஸ்டாலின்
- தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்
- அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 23 மாவட்டங்களில் திறனகங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 11 அரசு பல்கலைக் கழகங்களில் நான் முதல்வன் திட்ட பல்கலைக் கழக செயல்பாட்டு மையங்களையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒவ்வொரு திறனகமும் கணினி வசதி, குளிர்சாதன வசதி, உபகரணங்கள் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் ஒரே இடத்தில் தொழில் வழிகாட்டல், திறன் மேம்பாட்டு ஆலோசனை, பயிற்சி இணைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை வழங்கும் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்படும்.
இந்த மையங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டலில் மாவட்ட திறன் அலுவலர்களால் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் ஆதரவுடன் நிர்வகிக்கப்பட உள்ளன. நான் முதல்வன் திட்டம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவர்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வழிகாட்டிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம் திறன்களை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த திறன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.
2025-26ம் ஆண்டு அறிவிப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 மாநில கலை மற்றும் அறிவியல் மற்றும் ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டத்திற்காக பல்கலைக்கழக ‘செயல்பாட்டு மையங்கள்’ ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று துணை முதல்வர் அறிவித்தார். இந்த நான் முதல்வன் பல்கலைக்கழக செயல்பாட்டு மையங்கள் நான் முதல்வன் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் ஒரு Nodal Centre ஆக செயல்படும். தொழில் துறைக்கு தேவையான திறன் மேம்பாட்டு பாடப்பிரிவுகளை பல்கலைக்கழக பாடத்திட்டங்களோடு இந்த மையங்கள் ஒருங்கிணைக்கும்.
மாணவர்களுக்கு இன்டன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்க இந்த மையங்கள் உதவும். மாணவர் சேர்க்கை, திறன் சான்றிதழ் பெறுதல் மற்றும் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்களைக் கண்காணிக்க இந்த மையங்கள் உதவும். இந்நிகழ்ச்சியில், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் பிரதீப் யாதவ், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலாளர் சஜ்ஜன் சிங் ரா சவான், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி, மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளர் எஸ்.சுதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
