×

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்: ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா ஆவேசம்

சென்னை: நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்றும், தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் முதல்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இதற்கிடையே, திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தவெகவை காரணம் காட்டி திமுகவிடம் கூடுதல் இடங்களை கேட்டு வருகிறது.

மேலும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் சிலர் கூட்டணி தொடர்பான சில விமர்சனங்களை பொது வெளியில் பேசி வருவது திமுக தலைமைக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரசை தவெக அங்கீகரிப்பதாகவும், அவர்களும் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு ஆர்வம் காட்டுவதாகவும் தமிழக மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசியது காங்கிரசில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மாநில துணை தலைவர் கோபண்ணா நிருபர்களிடம் கூறியதாவது: 140 ஆண்டுகால காங்கிரஸ் பேரியக்கம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று சொல்லக்கூடிய தவெகவுடன், அதுவும் நடிகர் விஜய் என்ற தனி நபருடன் கூட்டணி அமைப்பதா? அது தற்கொலைக்கு சமம் என்ற வேதனை எங்களுக்கு எல்லாம் உள்ளது. அதை சிலர் சதித்திட்டம் தீட்டி, கடந்த 6 மாதங்களாக முயற்சி மேற்கொண்டனர். அவர்களின் முயற்சி தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்காக நானெல்லாம் கடுமையாக என்னுடைய கருத்துகளை வெளியிட்டேன்.

இன்று பாஜவை இந்திய அளவில் எதிர்க்கும் முதன்மை நிலையில் உள்ள தமிழக முதல்வரை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியை சார்ந்தவருடைய கடமை. இன்றைக்கு பாஜவை துணிவுடன் எதிர்க்க கூடிய ஒரே தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அந்த வகையில் இதுவரை பாஜவை எதிர்த்து தவெக ஒரு கருத்து கூட கூறவில்லை. அதற்கு துணிவில்லாத கட்சியுடன் காங்கிரஸ் எப்படி சேருவது? தவெகவுக்கு என்ன கொள்கை இருக்கிறது என்றே தெரியவில்லை.

பாஜவை எதிர்க்க தயங்குகின்ற, துணிவற்ற கட்சியுடன் காங்கிரஸ் இணைவது மிகப்பெரிய அவமானகரமான செயலாக தான் நான் கருதுகிறேன். திமுக 75 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மகத்தான பங்காற்றியுள்ளது. இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்த இயக்கம். இயல்பான கொள்கை சார்ந்த கூட்டணி என்பது திமுக, காங்கிரஸ் இடையிலானது. அந்த வகையில் கலைஞர், சோனியா காந்தியுடன் கூட்டணி அமைத்தார்.

இன்று ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி வைத்துள்ளார். இருவரும் சட்டமன்ற தேர்தலில் இணைந்து பிரசாரம் செய்வதன் மூலமாக மகத்தான வெற்றியை பெறுவார்கள். இதன் மூலம் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. முதல்வர், ப.சிதம்பரம் சந்திப்பு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது. நல்ல செய்தி வரும். திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி. மக்கள் ஏற்றுக் கொண்ட கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Congress ,Thaveka ,Kopanna ,Chennai ,Senior ,Tamil Nadu Assembly ,
× RELATED இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான்...