புதிய போக்குவரத்து சிக்னல் கோபுரம்

சேந்தமங்கலம், மார்ச் 3: சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் கோபுரத்தை, ராஜேஸ்குமார் எம்பி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சி ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் கோபுரம், திமுக கட்சி அலுவலகம் திறப்பு, கொடியேற்று விழா நடந்தது. ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் நல்லு ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் திராவிட மணி வரவேற்று பேசினார். விழாவில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., கலந்து கொண்டு சிக்னல் கோபுரம், கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, திமுக கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘சட்டமன்ற தேர்தல் வேலை தொடங்கி விட்டதால், திமுக நிர்வாகிகள் தேர்தல் முடியும் வரை, சொந்த வேலைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, தேர்தல் வேலையை தொடங்க வேண்டும். அரசின் சாதனைகளை வீடு, வீடாக நேரில் சென்று பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் கொடுத்து எடுத்துச்சொல்ல வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில், ஊராட்சி ஆலோசனை குழு தலைவர் விஜயகுமார், தொகுதி பொறுப்பாளர்கள் ஆனந்த பாபு, கோபிநாத், திமுக நிர்வாகிகள் குட்டி கார்த்தி மனோஜ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: