14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி

திருச்செங்கோடு, மார்ச் 2: திருச்செங்கோடு வட்டாரத்தில், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இளம்வயது பெண்களுக்கு எச்பிவி வைரசால் ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க இலவசமாக கார்டாசில் தடுப்பூசி போடும் பணி, நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 14 வயது கடந்த 15 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை மதிப்பிலான இந்த தடுப்பூசி, தற்போது அரசால் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

இதனால், 35 வயது முதல் 40 வயது கடக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க இந்த தடுப்பூசி பயன்படும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பில், திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள சீதாராம்பாளையம், சூரியம்பாளையம், இறையமங்கலம், சித்தாளந்தூர், தண்ணீர்பந்தல் பாளையம் ஆகியவற்றில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கார்டாசில் தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது.

சீதாராம்பாளையம், சூரியம்பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 50 தடுப்பூசிகளும், இறையமங்கலத்திற்கு 40 தடுப்பூசியும், சித்தாளந்துருக்கு 35 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது. சிறுமிகள் பெற்றோருடன் வந்து தடுப்பூசி போட்டுச் சென்றனர். திருச்செங்கோடு சீதாராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், செல்வி ராஜவேல், புவனேஸ்வரி உலகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் அருள்குகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: