வெளியுலகில் தலைகாட்டாமல் இருந்த நிலையில் அகங்காரம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் வேண்டாம்: மாஜி துணை ஜனாதிபதி உருக்கமான வேண்டுகோள்

உஜ்ஜைனி: முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உஜ்ஜைனி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து உலக நன்மைக்காக பிரார்த்தித்தார். நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற உஜ்ஜைனி மகாகாளீஸ்வரர் கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று இறைவனை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், பதவியில் இருந்த காலத்திலும் பல்வேறு புனித தலங்களுக்கு சென்று வந்துள்ளார். அதன்படி இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் உஜ்ஜைனி மகாகாளீஸ்வரர் கோயிலில் நடந்த புகழ்பெற்ற பஸ்ம ஆர்த்தி வழிபாட்டில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பயபக்தியுடன் பங்கேற்றார்.

இந்த சிறப்பு அதிகாலை பூஜையில் அவருடன் சுமார் 1500 பக்தர்களும் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த பிரம்மாண்டமான வழிபாட்டிற்கு பிறகு வெளியே வந்து பேசிய ஜெகதீப் தன்கர், ‘நாம் அனைவரும் அகங்காரம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் மற்றும் பொறாமை ஆகியவற்றை கடந்து வாழ்வில் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். நமது நாட்டின் மாபெரும் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக நான் மனதார பிரார்த்தனை செய்தேன். நானும் ஒரு விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன். நமது நாட்டிற்காக உழைக்கும் விவசாயிகள் மற்றும் எல்லையை காக்கும் ராணுவ வீரர்களின் தியாகம் அளப்பரியது, அவர்களின் அர்ப்பணிப்புக்கு நாம் எப்போதும் மிகுந்த நன்றியுடன் இருப்போம். அனைவரின் நல்வாழ்வுக்காகவும் நான் இறைவனை வேண்டுகிறேன்’ என்று உருக்கமாக தெரிவித்தார்.

Related Stories: