திருவனந்தபுரம்: கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு கேரள உயர்நீதிமன்ற தனி நீதிபதி விதித்திருந்த தடையை நேற்று டிவிஷன் பெஞ்ச் நீக்கி உத்தரவிட்டுள்ளது. காமாக்யா நாராயண் சிங் என்பவர் இயக்கிய கேரளா ஸ்டோரி 2 என்ற படம் நேற்று இந்தியா முழுவதும் வெளியாக இருந்தது. இந்நிலையில் கேரளாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதால் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி பெச்சு குரியன், கேரளா ஸ்டோரி 2 படத்தை வெளியிட 15 நாள் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த மனுவில் எந்த மதத்தையோ, மாநிலத்தையோ அவமதிக்கும் வகையில் படத்தில் காட்சிகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சுஷ்ருத் ஏ.தர்மதிகாரி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
