நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் எதிரொலி; ஒன்றிய தகவல் அமைச்சகத்திற்கு கல்வி அமைச்சகம் அவசர கடிதம்: பாடபுத்தகத்தை டிஜிட்டல் தளங்களில் நீக்க உத்தரவு

 

புதுடெல்லி: நீதிமன்ற ஊழல் தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்புத்தகத்தை டிஜிட்டல் தளங்களில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் அமைச்சகத்திற்கு கல்வி அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) வெளியிட்ட எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் மலிந்துள்ளதாக தவறான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக நீதிமன்ற காலிப்பணியிடங்கள், வழக்குகள் தேக்கம், நீதித்துறை ஊழல் குறித்து சர்ச்சையான முறையில் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தன.

இது தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த பிரச்னை குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், நீதித்துறையின் மாண்பை சீர்குலைக்க திட்டமிடல் செய்யப்பட்ட சதி இதுவென கண்டனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று அந்த புத்தகத்தை அச்சிடவோ, மறுபதிப்பு செய்யவோ அல்லது இணையத்தில் பதிவேற்றவோ கூடாது என முழுமையான தடையை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ‘யாரும் நீதித்துறையின் கண்ணியத்தை கெடுப்பதை அனுமதிக்க முடியாது’ என நீதிபதிகள் எச்சரித்தனர்.

முன்னதாக, கடந்த 25ம் தேதியன்று இச்சம்பவத்திற்காக சம்பந்தப்பட்ட என்சிஇஆர்டி நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய புத்தகத்தை அனைத்து டிஜிட்டல் தளங்களில் இருந்தும் உடனடியாக நீக்க கோரி ஒன்றிய கல்வி அமைச்சகம் இன்று (பிப். 27), ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘புத்தகங்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுவதை நிறுத்துவதுடன், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவை பகிரப்படுவதையும் உடனடியாக தடை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, புத்தகத்தை வடிவமைத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் புத்தகத்தை தயாரித்த குழுவினருக்கும், அச்சிட்டு வெளியிட அனுமதி அளித்த உயரதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சரவையில் கடுப்பான மோடி
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்ட எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை ஊழல் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 24) தேதியன்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

‘எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு நீதித்துறை ஊழல் குறித்து என்ன கற்பிக்கிறோம்?’ என அவர் கேள்வி எழுப்பியதோடு, இதுபோன்ற தகவல்கள் வெளியாகி இருப்பது மிகப்பெரிய தவறு என்றும் சுட்டிக்காட்டினார். நீதித்துறையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் இத்தகைய பாடத்திட்டங்கள் அமைந்தது துரதிர்ஷ்டவசமானது என மூத்த அமைச்சர்கள் கவலை தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாகவே, ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது குறிபிடத்தக்கது.

Related Stories: