×

அமராவதி அணையில் ரூ.9.75 கோடியில் கல்லாபுரம் ஷட்டர் சீரமைக்கும் பணி தீவிரம்

உடுமலை : அமராவதி அணையில் பழுதடைந்த கல்லாபுரம் ஷட்டர் மற்றும் பிரதான கால்வாயை சீரமைக்கும் பணி ரூ.9.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது.

இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு ஆற்று மதகு வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதில், நேரடி பாசன பகுதியான கல்லாபுரம், ராமகுளம் ராஜகால்வாய் பாசனத்திற்கு, அணையிலிருந்து வலது கரையில் அமைந்துள்ள மதகு வழியாக, நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த மதகு முறையாக பராமரிக்காத நிலையில், பழுதடைந்து கடந்த எட்டு மாதத்திற்கு முன், உடைந்து விழுந்தது. இதனால், இரு கால்வாய்கள் வழியாக பாசன வசதி பெற்று வரும் 3,300 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பாசனத்திற்கு நீர் வழங்க முடியாததால், பழைய ஆயக்கட்டு, கல்லாபுரம், ராமகுளம் பாசன நிலங்களில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அணை நீர் மட்டம் சரிந்தாலும், அணைக்குள் பழங்காலத்தில் அமைக்கப்பட்ட கால்வாய் வழியாக, இந்த இரு கால்வாய்களுக்கும் நீர் எடுக்கும் வசதி உள்ளது. அதோடு, வலது கரை மதகு பழுது காரணமாக, அணையிலிருந்து நீர் இழப்பும் அதிகரித்து காணப்பட்டது.

இதனையடுத்து, வலது கரை மதகு மற்றும் உபகரணங்கள் சீரமைக்க, தமிழக அரசு 4.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதில், மண்ணணை மதகின் நீர் கசிவினை தடுப்பதற்கான புனரமைத்தல் பணி, வலதுகரை மண்ணணை மதகில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவுகளை அடைத்தல், அதன் கட்டுமான இணைப்புகளில் சிதலமடைந்த பழைய சிமெண்ட் பூச்சுகளை அகற்றி, புதிய கான்கிரீட் கொண்டு நிரப்புதல், வலது கரை மதகில் காணப்படும் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் நீர்கசிவுகளை அடைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல், சிமெண்ட் கிரௌட்டிங் செய்தல், மேல்பூச்சு பூசுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், மதகின் கதவணைகள் மற்றும் அதன் தூக்கு உபகரணங்கள் முழுமையாக மாற்றி அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,“அணை நீர் மட்டம் குறையாததால், வலது கரை மதகு பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாமல், சம்பா பருவ நெல் சாகுபடி பாதித்துள்ளது.

தற்போது, அணை நீர் மட்டும் குறைந்துள்ள நிலையில், சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வழக்கமாக அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, ஜூன் மாதம் நீர் திறக்க வேண்டிய நிலையில், பருவ மழைகளுக்கு முன், பணியை விரைந்து முடிக்க வேண்டும்” என்றனர்.

பிரதான கால்வாய் பணி

அமராவதி அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்களுக்கு பாசன நீர் வழங்க பயன்படும் பிரதான கால்வாய் பராமரிப்பின்றி, பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமராவதி பிரதான கால்வாயின் சரகம், 16.5 மைல் முதல் 28.7 மைல் வரை அமைந்துள்ள குறுக்கு கட்டிட அமைப்புகளை புனரமைத்தல் பணியின் கீழ், பிரதான கால்வாய் கீழ் பகுதியில் அமைந்துள்ள 13 கீழ்மட்ட குகை நீர் வழிப்பாதைகள் மற்றும் கால்வாயில் அமைந்துள்ள 20 மதகுகள் மற்றும் அவற்றுக்கான கதவணைகள் புதுப்பிக்கப்படுகின்றன.

மேலும், சேதமடைந்த சிலாப்புகள், 314 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சிலாப்கள், ரூ.5.50 கோடி மதிப்பில் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, பிரதான கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் துவங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kallapuram ,Amaravathi Dam ,Udumalai ,Tiruppur ,Karur ,
× RELATED ஆண்டிபட்டியில் ரூ.3.50 கோடியில் புதிய...