போடி : போடி அருகே போடிமெட்டு மலைச்சாலை 2வது கொண்டை ஊசி வளைவில் கர்நாடகா கனரக லாரி பழுதாகி நின்றதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று போடி மெட்டு மலைச் சாலை வழியாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜகுமாரிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு 16 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனமான லாரி மலை சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது காலை 7 மணி அளவில் போடி மெட்டு 2வது கொண்டை ஊசி வளைவில் கடந்து கொண்டிருந்த போது திடீரென கனரக வாகனம் பழுதாகி சாலை நடுவில் நின்று விட்டது. இதனால் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருகின்ற பஸ் உள்பட வாகனங்களும், தமிழ்நாட்டிலிருந்து மலைச்சாலை வழியாக கேரளா மாநிலம் செல்லும் அனைத்து வாகனங்களும் கடக்க முடியாமல் வரிசை கட்டி நின்றன.
போடி மெட்டு மலைச்சாலையிலேயே மலை அடி வாரம் முந்தல் வரையில் முடங்கினர். டூவீலர் உட்பட சிறிய வாகனங்கள் சாலையை கடந்து சென்றாலும், லாரி பஸ் ஆகியவை கடந்து செல்ல முடியாமல் பாதி வழியில் நின்றது.
இதன் காரணமாக அதிகாலையில் ஏலத் தோட்ட வேலைக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர்கள் என 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். தொடர்ந்து தகவல் கிடைத்தனடிப்படையில் பொதுமக்கள்,டிப்பர் லாரி உதவியு டன் பழுதாகி நின்ற நீண்ட லாரியை அனைவரும் சேர்ந்து தள்ளி சாலை யோரமாக பாதுகாப்பாக நிறுத்தினர். பின்னர் 3 மணி நேரம் கழித்து போக்குவரத்து சீரானது.
