×

கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கில் 26 பேரின் ஆயுள் தண்டனை உறுதி: ஐகோர்ட் கிளை உத்தரவு

 

மதுரை: திருப்பாச்சேத்தி அருகே, கச்சநத்தத்தில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்த வழக்கில், 26 பேரின் ஆயுள் தண்டனையை ஐகோர்ட் மதுரை கிளை உறுதி செய்து உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே, கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018ம் ஆண்டு கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது முன்விரோதத்தில் ஊருக்குள் புகுந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த கும்பல், பட்டியல் சமூகத்தவரின் வீடுகளைச் சேதப்படுத்தி, அவர்கள் மீது அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.

இந்த தாக்குதலில் கச்சநத்தத்தை சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஸ் உள்ளிட்ட 33 பேர் மீது கொலை, தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிவகங்கை தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த விசாரணையின்போது 33 பேரில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் தலைமறைவாகினார்; 3 சிறுவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த 1.8.2022ல் பாக்கியுள்ள 27 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 27 பேர் தரப்பில், ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், பூர்ணிமா ஆகியோர், ‘27 பேரில் 26 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, இளையராஜா என்பவரை மட்டும் விடுதலை செய்தனர். இதனால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Kachanatham ,Madurai ,Madurai High Court ,Tiruppachethy ,Tiruppachethy, Sivaganga district ,
× RELATED தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை...