×

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 ஊதிய உயர்வு: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாடு அரசு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிவரும் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். மார்ச் 1ம் தேதி முதல் மாதம் ரூ.30,000 ஊதியம் பெறலாம். அதேபோல் அரசு பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ரூ.20,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இவ்வரசு எப்பொழுதும், அரசு ஊழியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் துணை நின்று செயலாற்றி வருகிறது.

அவர்களின் நலன் பேணுவதில் உறுதியுடன் செயல்பட்டு வந்திருக்கிறது. இவ்வகையில் நமது முதலமைச்சர் உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு பல்வேறு உன்னதத் திட்டங்களை வழங்கி உள்ளார். இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் நமது மாணாக்கர்கள் முதன்மை பெற வேண்டும் என்று “நான் முதல்வன்” திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தற்போது உலகம் உங்கள் கையில் என்ற நிகழ்வின் மூலம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஆராய்ச்சியை மேம்படுத்த முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை. ஆய்வகங்களை மேம்படுத்த நிதி.

தலைசிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பயில நடவடிக்கை போன்றவற்றை மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கும் பல்வேறு நிலைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் கிராமப்புற மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் 2021-26ம் ஆண்டில் 38 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் 18,760 மாணாக்கர்கள் கூடுதலாக பயனடைந்துள்ளனர். அதேபோல், 250-க்கும் மேற்பட்ட புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.

2015ம் ஆண்டிற்குப் பிறகு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பப்படாமல் இருந்த நிலையில் இவ்வரசு பொறுப்பேற்றவுடன் 4,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நீதிமன்ற வழக்குகளினால் மேல்நடவடிக்கை தொடரப்படாத நிலையில் தற்போது 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டு, தற்போது 5 பாடப்பிரிவுகளுக்கு உதவிப்பேராசிரியர்கள் தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மாணாக்கர்களின் கல்விச் சேவை எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவ்வப்போது கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் 2016-இல் இருந்து உயர்த்தப்படாமல் இருந்த ஊதியம் 2022-ல் ரூ.15,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர், மீண்டும் 2 ஆண்டுகளிலேயே (2024-ல்) ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.25,000-லிருந்து ரூ.30,000-ஆக உயர்த்திட தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான இவ்வரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, கவுரவ விரிவுரையாளர்கள், வரும் மார்ச் 1ம் தேதி முதல் மாதம் ரூ.30,000 ஊதியம் பெறலாம். அதேபோல் அரசு பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ரூ.20,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு, ஆண்டிற்கு ரூ.53 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 8,741 பேர், அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக உதவி பேராசிரியர்கள் 319 பேரும் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் 586 பேர் ஆக மொத்தம் 9,646 தற்காலிக ஆசிரியர்கள் இதன் மூலம் பயனடைவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தனர். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் பணியாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதால் இவர்கள் தொடர்ந்து பணிபுரிய அறிவுறுத்தினார்கள்.

அதனால் அண்ணா பல்கலைக்கழக தற்காலிக உதவி பேராசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சரால் 2025-26-ம் கல்வியாண்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் தொடங்கப்பட்ட ”அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ”முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவிடைமருதூர்”. என
பெயர் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Kovi Sezhiyan ,Chennai ,Tamil Nadu Government ,State Colleges of Arts and Sciences ,Government ,
× RELATED சென்னை விமான நிலையத்தில்...