என்னது…. சசிகலா புதுக்கட்சியா? எங்க வீட்டுல டவர் இல்ல… பேப்பரும் நான் படிக்கல… அலறும் செல்லூர்

மதுரையில் அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் செய்தியாளர்கள், ‘சசிகலா புதுக்கட்சி ஆரம்பிச்சிருக்காங்க. எதிரிகளை வேரறுக்கணும்னு சொல்றாங்களே?’ என கேட்க, ‘‘அப்படியா, நான் பார்க்கல… பார்த்துட்டு சொல்றேன். நான் பார்க்கலங்க..’’ என்றார். ‘அவங்களுக்கு அச்சுறுத்தல் இருந்ததுன்னு சொல்றாங்களே?’ என கேட்க, ‘‘ஏங்க அதாங்க அத பார்க்கவே இல்லை. வீடியோ நான் பார்க்கலங்க.

கிராமத்துல இருக்கேன். எங்க வீட்டுக்கிட்ட வண்டியை நிப்பாட்ட முடியாது. வீட்டுக்கு வர முடியல. அதனால கிராமத்துல இருக்கேன். அங்கே செல் டவர் இருக்காது. எங்க தலைர் பேசுவாரு. கட்சிக்காரங்க பேசுவாங்க. ஹலோ, ஹலோன்னு சொல்வாங்க.. கிடைக்காது. மலை அடிவாரத்தில் இருக்கேன்’’ என்றதும், ‘இது 5ஜி உலகமாச்சே டவர் கிடைக்கலியா?’ என நிருபர் திரும்பக் கேட்க, ‘‘மலை அடிவாரத்துல இருக்குறதுனால கேட்கலங்க.

உண்மையைத்தாங்க சொல்றேன். காலையில் பேப்பர் படிக்கல. மதுரை பரவையில் நிகழ்ச்சியை முடித்து விட்டு, இங்கே வந்தேன். பேப்பர் படிச்சிருந்தா கூட சொல்லி இருப்பேன். பாத்துட்டு சொல்றேன்’’ என்றார். அப்போது ‘சசிகலா மூவர் படத்துடன் கட்சிக்கொடி எல்லாம் வெளியிட்டிருக்காங்க’ என்றதும், ‘‘அதாங்க நான் பார்த்துட்டு சொல்றேன். மத்ததை பத்தி பேசுங்க’’ என்றார்.

‘டிடிவி.தினகரன் நேரடியாக பாஜவிடம்தான் கூட்டணி பேசுவோம், அதிமுகவிடம் பேசமாட்டோம். என்னை கொண்டு வந்தது பாஜதான்னு சொல்கிறாரே?’ என்றதற்கு, ‘‘நீங்க அவரிடம் தாங்க கேட்கணும். என்னிடம் கேட்டு என்ன செய்ய? எங்க பொதுச் செயலாளரிடம் கேளுங்க’’ என்றார்.

* ஓபிஎஸ் ஒரு அனாதை
‘திமுக கூட்டணி பலமானதுன்னு அமித்ஷா ஓபிஎஸ்சிடம் சொன்னாராமே?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு , ‘‘ஏங்க ஓபிஎஸ் பேச்செல்லாம் ஒரு பேச்சா? அவரே இங்கிருந்து போயி அனாதையா நிக்கிறாரு. என்ன செய்றதுன்னே அவருக்கு தெரியல. அவரிடம் இருந்தவங்க எல்லாம் இங்கே வந்துட்டாங்க. நீங்க அவரு சொல்றாரு இவரு சொல்றராருன்னு… சும்மா சொல்லிக்கலாம். அப்போதான் அவரை நீங்க பத்திரிகையில் போடுவீங்க’ என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

‘ஓபிஎஸ் மீது தவறில்லை. மற்றவர்கள் தான் சூழ்ச்சி செய்கிறார்கள்னு சசிகலா சொல்லி இருக்காரே?’ என்றதும் மீண்டும் கடுப்பான செல்லூர் ராஜூ, ‘‘நான் தான் அவங்க பேச்சை கேட்கலைன்னு சொல்றேன்ல.. திரும்பத்திரும்ப அங்கேயே போறீங்க? ஓட்டிக்கிட்டே இருக்காதீங்க, நான் தான் பார்க்கலேன்னு சொல்றேன்ல..’’ என்ற படி கோபத்தின் உச்சத்திற்கு சென்றார்.

Related Stories: