வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் பேசிய அக்கட்சியினர் தலைவர் விஜய், ‘‘சாலையில் நின்றுகொண்டிருந்த ஜல்லிக்கட்டுக் காளையைக் கண்டு எல்லோரும் பயந்தார்கள். ஆனால், ஒரு சிறுவன் மட்டும் பயப்படாமல் அருகில் சென்று அந்தக் காளைக்குப் புல்லுக்கட்டைக் கொடுத்து, அதைப் பிடித்துச் சென்றான்’’ என்று ஒரு குட்டிக்கதை சொன்னார். இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி, விஜய்யின் பேச்சை விமர்சித்து காணொலி வெளியிட்டுள்ளார்.
அந்த காணொலியில், ‘‘ஹாய் விஜய் அண்ணா; இப்போதுதான் உங்களின் வேலூர் பரப்புரை வீடியோ பார்த்தேன். வழக்கம்போல இதிலும் ஒன்னும் இல்லை. நீங்கள் பேசும்போது போகிறபோக்கில் ஜல்லிக்கட்டுக் காளைக்கு புல்லுக்கட்டைக் காட்டி ஒரு குழந்தை ஓரமாய் கொண்டுபோய் விட்டது எனச் சொல்லியுள்ளீர்கள். உங்கள் கட்சியில் உள்ளவர்களில் பாதிப்பேர் சிறுவர்கள். அவர்கள் நானும் போய் புல்லுக்கட்டைக் காட்டுகிறேன் என எதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது. 50ஐ 500 ஆக்கிவிடாதீர்கள்.
கஷ்டப்பட்டு எல்லோரும் போராடி ஜல்லிக்கட்டு வாங்கியுள்ளோம், இன்றைக்கு நன்றாக நடந்துகொண்டு இருக்கிறது. உங்கள் ரசிகர்கள் போய் புல்லுக்கட்டைக் காட்டி எதாவது நடந்துவிட்டால் மறுபடியும் போராட யாருக்கும் திராணி இல்லை. பாத்துப் பக்குவமாப் பண்ணுணே; நீங்க உங்க இஸ்டத்துக்குப் பேசிட்டுப் போய்டாதணே’’ என்று கூறி இருந்தார். இதையடுத்து ஜூலியை ஆபாச வார்த்தைகள் கூறி இழிவுபடுத்தியும், கொலை மிரட்டல்கள் விடுத்தும் விஜய் ரசிகர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக நேற்று புதிய வீடியோ ஒன்றை ஜூலி வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது: விஜய் அண்ணா, உங்கள் வேலூர் பரப்புரை பேச்சை பார்த்து விட்டு அதில் ஒன்றும் இல்லை என்ற ஆதங்கத்தில் நான் வீடியோ வெளியிட்டு இருந்தேன். உடனே உங்களது ரசிகர்கள், ரசிகர்கள் தான் அவர்கள் இன்னும் அரசியல் வயப்படவில்லை. உங்கள் ரசிகர்கள் என்னை அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் கடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மைனர் பசங்களிடம் இருந்து முக்கால்வாசி போலி ஐடிகள் மட்டும்தான்.
அதை வைத்துக்கொண்டுதான் அவர்கள் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை டெலிட் செய்யவும் மாட்டேன், எனது கருத்துகளில் இருந்து பின் வாங்கவும் மாட்டேன். என்னை மிரட்டினால் பரவாயில்லை. என்னை சார்ந்தவர்களை மிரட்டுவதால் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என்றால் நான் என் வீட்டில் இருப்பேன்.
இல்லை என்றால் எனது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. ஆனால் அவங்கள விட்டுடுங்க. ஓ… நீங்க பனையூரை விட்டு வெளியே வர மாட்டீங்கல்ல. நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன், நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன். என்னை திட்டினால் என்னை திட்டுவது போல் தான். மக்களை திட்டுவது போல என்று யாரையும் உள்ளே இழுத்து போட மாட்டேன்.
ஒரு பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் எவ்வளவு மரியாதையும் மதிப்பும் பாதுகாப்பும் உங்கள் ரசிகர்கள் கொடுக்கிறார்கள் என்பதை எனது வீடியோவுக்கு கீழ் உள்ள கமெண்ட்களை நேரம் இருந்தால் படித்து பாருங்கள். இவ்வாறு ஜூலி பேசியுள்ளார். இந்த வீடியோவில் விஜய் போலவே மாடுலேஷனில் அவர் பேசி இருக்கிறார். இதைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் ஜூலியின் துணிச்சலை பாராட்டி வருகிறார்கள்.
