மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக முறைகேடு புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வெங்கடேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கோமதி என்பவர் கடந்த 2013ல் இளநிலை எழுத்தராக பணியில் சேர்ந்தார். பின்னர் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் சிலருடன் கூட்டு சேர்ந்து செல்வாக்கு மிக்க நபராக மாறி தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் மீது சட்டவிரோதமாக சான்றிதழ்கள் வழங்கியது, பல்கலைக்கழக ஆவணங்களை வெளியிட்டது, ஆய்வு மற்றும் இணைப்பு வழங்குவதில் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் மீது இதுவரை பல்கலைக்கழக நிர்வாகம் முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தண்டனை வழங்குவதாக கூறி வேறு துறைக்கு தான் மாற்றினர். வண்டியூர் பகுதியில் மதிப்புமிக்க வீடு வாங்கியுள்ளார். ஊழியர்களுக்கு ரூ.2 கோடிக்கு மேல் கடன் வழங்கியதாகவும் குற்றசாட்டு உள்ளது. இது அரசு சேவை விதிகளுக்கு முரணானது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தேன். எவ்வித பதிலும் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, அந்த புகார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரம், எனது புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை பதிவாளர் கடந்த ஜனவரி மாதம் முடித்துள்ளார். இது முறையான நடவடிக்கை அல்ல. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உதவியுடன் நியாயமான முறையில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர், ‘‘அரசு பணியில் உள்ள ஒருவர் மீது புகார் எழும்போது, முறையாக அனுமதி பெற்று, விசாரணை நடத்த வேண்டும். புகார்தாரர் குறித்த விபரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை. பதிவாளர் தரப்பில், கோமதி மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என முடித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அமைப்பாக செயல்படாமல், தபால் நிலையமாக மட்டும் செயல்பட்டு, புகாரை அப்படியே பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளது. விபரங்களை சரிபார்ப்பது என்பது ஊழியரின் பதிலை கேட்பது மட்டுமல்ல, விசாரணை அதிகாரி வேறு இடங்களிலிருந்தும், விபரங்களைப் பெற்று விசாரித்திருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் ஊழல் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது எதிர்கால சந்ததியினரையும் பாழாக்கும். லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற விசாரணை அமைப்புகள், தங்கள் கடமையையும், பணியையும் முறையாக செய்யாத போது, வேறு அமைப்புக்கு மாற்றுவது அவசியமாகிறது. எனவே, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.
