டெல்லி: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எளிமையான வாழ்வுக்கு சொந்தக்காரர் நல்லகண்ணுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் இரா.நல்லகண்ணு(101) காலமானார்.சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவுக்கு, கடந்த 1ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று 1.55 மணியளவில் அவர் உயிரிழந்தார். மறைந்த நல்லகண்ணுவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “எளிமையான வாழ்வுக்கு சொந்தக்காரர் நல்லகண்ணுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல். ஒடுக்கப்பட்ட மக்கள், பட்டாளி மக்களுக்கு குரல் கொடுத்த நல்லகண்ணுவின் அர்ப்பணிப்பு நினைவுகூரப்படும். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களால் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நல்லகண்ணுவின் உடல் தற்போது பொது மக்கள் அஞ்சலிக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணி வரை அவரது உடல் அங்கு வைக்கப்பட்டு இருக்கும். நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பின், நல்லகண்ணு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோரும் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.நல்லகண்ணு மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடி 7 நாட்களுக்கு அரை கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், 2016ல் நல்லகண்ணு, தன் உடலை மருத்துவ மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்காக, சென்னை மருத்துவ கல்லூரிக்கு எழுதி கொடுத்திருந்தார். அவர் விரும்பியபடி, சென்னை மருத்துவ கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, அவரது உடலை தானம் செய்ய, குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.எனவே, தி.நகரில் இருந்து, அவரது உடல் பேரணியாக எடுத்து செல்லப்பட்டு, சென்னை மருத்துவ கல்லுாரிக்கு, நாளை முறைப்படி வழங்கப்பட உள்ளது.
