×

அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் செயலிழந்ததால் நல்லகண்ணுவின் உயிர் பிரிந்தது : மருத்துவமனை தகவல்

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான மக்கள் தோழர் இரா.நல்லகண்ணு காலமானார்.அவருக்கு வயது 101.மறைந்த நல்லக்கண்ணுவுக்கு அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நல்லகண்ணு மறைவு குறித்து, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நல்லக்கண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின்போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது. பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடர்ந்து வந்தனர்.

இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு இன்று (25. 02 2026) பிற்பகல் 1. 55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக்குழுக்களுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளது. இதனிடையே மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பப்படியே மருத்துவ மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது.

Tags : Nallakannu ,Chennai ,Communist Party of India ,People's Comrade ,I. Nallakannu ,Chennai Medical College ,
× RELATED உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற...