இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரருமான அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. இன்று காலைதான் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று உடல்நலம் குறித்து விசாரித்து வந்தேன். மீள்வார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், அய்யா அவர்கள் மரணமடைந்துள்ளார். அய்யாவின் மறைவுக்கு எஸ்டிபிஐ கட்சி தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. வாழும் போதே வரலாறாகத் திகழ்ந்த ஒரு உன்னத மனிதரைத் தமிழ்நாடு இன்று இழந்து நிற்கிறது என்றால் அது மிகையல்ல.
அய்யா நல்லகண்ணு அவர்களின் மறைவு என்பது வெறும் ஒரு அரசியல் தலைவரின் மறைவு மட்டுமல்ல; அது ஒரு நேர்மையான சகாப்தத்தின் முடிவு. மிக இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகப் போராடி சிறை சென்றவர்; தன் வாழ்வையே நாட்டிற்காக அர்ப்பணித்த ஒப்பற்ற தியாகி ஆவார். 80 ஆண்டுகால நீண்ட பொதுவாழ்வில் ஒரு சிறு கரும்புள்ளி கூட இல்லாத மாசற்ற அரசியல்வாதியாகத் திகழ்ந்தவர். இன்றைய கால அரசியல் சூழலில் “நேர்மை” என்பதற்கு மறுபெயராகத் திகழ்ந்த பெருமைக்குரியவர் அவர்.
ஏழை எளிய மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை சமரசமின்றி முன்னெடுத்தவர். குறிப்பாக, தமிழகத்தின் இயற்கை வளங்களைச் சீரழிக்கும் மணல் கொள்ளைக்கு எதிராக அவர் நடத்திய சட்டப் போராட்டங்கள் வரலாற்றில் மிக முக்கியமானவை. மாற்றுக் கருத்துடைய அரசியல் தலைவர்களும் கூட அண்ணாந்து பார்க்கும் மிகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர்.
இந்திய அரசியல் களத்தின் ஒரு சகாப்தமும், தூய்மையான பொதுவாழ்விற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவருமான அய்யா இரா.நல்லகண்ணு அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அய்யா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், சிபிஐ கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
