டெல்லி : என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) 8ம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாட புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் அதில் ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற பாடத்தில், நீதித்துறையின் பங்கு, அதன் கட்டமைப்பு மற்றும் நீதி அணுகல் முறைகள் குறித்து மட்டுமே விளக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீதித்துறையில் ஊழல், வழக்குகள் தேக்கம், நீதிபதிகளின் குறைவான எண்ணிக்கை ஆகிய நீதித்துறையின் சவால்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, நீதித்துறையில் ஊழல் குறித்த இந்த புதிய பகுதியில் நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் நிலவும் ஊழல், ஏழை மற்றும் சாதாரண மக்கள் நீதியை பெறுவதை மோசமாக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீதித்துறையில் ஊழல் குறித்த புதிய பாடப்பிரிவு குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்கி ஆகியோர் முறையிட்டனர். நீதித்துறையில் ஊழல் மலிந்துள்ளது என்று பாடப்புத்தகத்தில் சேர்த்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது என்று வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார். இதனை கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த்,”நீதித்துறை தலைவராக நான் எனது கடமையைச் செய்கிறேன், அதில் கவனமாகவும் உள்ளேன்.
நீதித்துறையை களங்கப்படுத்த எவரையும் அனுமதிக்க மாட்டேன், உரிய நடவடிக்கை எடுப்பேன். இப்பிரச்சனையை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தெரியும். திட்டமிட்டு இதுபோன்ற ஒரு பகுதி பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, அதன் நோக்கம் எனக்கு தெரியும். நீதித்துறையில் மட்டும்தான் ஊழல் மலிந்து இருப்பதுபோல் திட்டமிட்டு சித்தரிக்க முயற்சிக்கின்றனர்,”என கடும் கண்டனம் தெரிவித்ததுடன், நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டது குறித்து தாமாக முன் வந்து வழக்குப்பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.
