- அமைச்சர்
- பெரியகாரப்பன்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- கே.ஆர்
- குடியரசின் ஜனாதிபதி
- ஆர்மீனியா
- எடப்பாடி பழனிசாமி
- பெரியகரப்பன்
- கூட்டுறவுத் துறை
சென்னை : கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு,100 நாட்களாகியும் முடிவை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சித்து வருவதாக உண்மை நிலையை தேடும் முனைப்பறிவில்லாத மூடராக, கழக அரசு மீது புழுதிவாரி தூற்றி நீலி கண்ணீர் வடித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
எதிர்க்கட்சி தலைவர் என்கின்ற முறையில் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதில் அக்கறை கொண்டவராக இருந்திருந்தால் SRB மற்றும் DRB தேர்வு விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்தவராக இருந்திருப்பார்.ஆனால் அவரோ, தனக்கு கிட்டியிருக்கும் டெல்லி பாதுஷாக்களின் அடிமைத் தொழிலுக்கு எந்த பாதகமும் வந்து விடக்கூடாது என்பதற்காக விடிந்தது முதல் விழி மூடி தியானம் செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் SRB மற்றும் DRB தேர்வு விஷயத்தில் என்ன நடந்தது என்பதை எடப்பாடியால் அறிந்து கொள்ள முடியவில்லை.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகள் மற்றும் பிரதம, மாவட்ட அளவிலான கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் காலியாக இருந்த 2,848 உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக 06.08.2025 அன்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளுக்கான எழுத்துத் தேர்வு 05.10.2025 அன்று நடைபெற்றது. அதில், தகுதி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு 15.11.2025 அன்று நடத்தப்பட்டது. அதேபோன்று, பிரதம மற்றும் மாவட்ட அளவிலான கூட்டுறவுச் சங்கங்கள்/வங்கிகளுக்கான எழுத்துத் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற்றதுடன், அதில் தகுதி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு 24.11.2025 அன்று நடத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1983 இன் பிரிவுகள் 74 மற்றும் 75 (1) மற்றும் தமிழ்நாடு பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கங்களின் பொது பணிநிலை திறன் விதிகள், 2024 ஆகியவை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 19(1)(C) மற்றும் சரத்து 43-B ஆகியவற்றிற்கு முரணாக இருப்பதாக குறிப்பிட்டு மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு எண் 17071/2025 தொடரப்பட்டது.
இவ்வழக்கில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வின் 12.08.2025 நாளிட்ட இடைக்கால ஆணையில், நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் நியமன ஆணைகள் வெளியிடப்படக்கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு விரைவில் கிடைக்கப்பெற கூட்டுறவுத்துறை சார்பில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே மேற்கண்ட தேர்வுகளுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், 2021-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, மாநில மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு மொத்தம் 13,022 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தவிர்த்து, இதர கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருந்த 2,403 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்படும் பொருட்டு, நியாயவிலைக் கடைகளில் காலியாக இருந்த 8,774 விற்பனையாளர் மற்றும் 1,845 கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்பதை அறிந்தே வெற்று வாக்குறுதிகளை வாரி வழங்கும் 10 தோல்வி பழனிச்சாமி, வருகின்ற தேர்தலில் பதினோராவது தோல்வி பழனிச்சாமியாக மாறுவாரே தவிர 10,000 ரூபாய் பழனிச்சாமியாக வாய்ப்பே இல்லை.
காப்பியடி கண்ணாயிரமாக அவதாரம் எடுத்து அரிதாரம் பூசி வீதி எங்கும் வாய்க்கு வந்ததை வாக்குறுதிகளாக வழங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி, தன்னிடம் விரயமாக வைத்திருக்கும் மூளையை பயன்படுத்தி சொந்தமாக சிந்தித்து எதையாவது தேர்தல் வாக்குறுதியாக சொல்லி இருக்கிறாரா என்றால் அதுவும் கிடையாது.புலியை பார்த்து பூனை கோடு போட்டுக் கொண்டு உருண்டால், அதை தமிழக மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். திருட்டுப் பூனையின் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு மக்கள் ஏமாந்தும் விட மாட்டார்கள்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலிலே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நல்லாட்சி மீண்டும் தொடரும். ”ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பது போல எதிர்கட்சி தலைவர் அவர்களின் வெற்று வாக்குறுதிக்கும், அறிக்கைக்கும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
