×

உண்மை உயர்வைத் தருமா?

“சத்தியமேவ ஜெயதே’’ என்பது வேத வாக்கு. ராமபிரான், மனிதனாக அவதாரம் செய்திருந்தாலும், ஜடாயு என்கிற பறவையை சத்தியத்தினால் மோட்சத்திற்கு அனுப்பினான் என்று வருகிறது. நம்மில் பலரும் ஏதோ ஒருகாரணத்தால், பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். உண்மையைச் சொன்னால் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடுமோ என்று நினைக்கிறோம். ஆனால், உண்மைதான் உயர்வைத் தரும். வாழ்வின் நிறைவைத் தரும். ஒரு கதை சொன்னால் புரியும்…ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோயிலுக்குள் நுழைந்து நல்ல வரும்படி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அந்தக் கோயில் மண்டபத்தில் ஒரு பெரியவரைச் சந்தித்தான். அவரிடம் சென்று, “எனக்கு எதாவது ஒரு சுலோகமோ பாட்டோ எளிமையாகச் சொல்லித் தாருங்கள். நீங்கள் சொல்வது புரியும் படியாகவும், நான் எளிதில் பின்பற்றும் படியாகவும் இருக்க வேண்டும்’’ என்றான். வந்து உபதேசம் கேட்கிறவன் நிபந்தனையும் போடுகிறானே என்கிற வியப்பு.“நீ யார்?” என்று விசாரிக்க, அவன் எந்தவித வருத்தமோ கூச்சமோ தயக்கமோ இன்றி, “நான் ஒரு திருடன்!’’ என்றான்.

“என்னப்பா சொல்கிறாய்? நீ திருடனா? திருடிப் பிழைக்கலாமா? தவறு அல்லவா?’’“சாமி.. எனக்குத் தெரிந்த தொழில் இது ஒன்றுதான். மனைவி மக்களைக் காப்பாற்ற பல ஆண்டுகளாகச் செய்கிறேன்’’ என்றான். திருடனாக இருந்தாலும் மறைக்காமல் உண்மை பேசுகிறான். இறையருளால் இவன் திருந்துவான். இவன் பேசும் உண்மையே இவனை உயர்த்தும் என்று பெரியவர் நினைத்தார். “இன்று சத்தியம் வத என்ற மந்திரத்தைப் போதிக்கிறேன். அதாவது, உண்மையே பேசு என்று பொருள். எக்காரணத்தை முன்னிட்டும் பொய் பேசாதே’’ என்றார். அவனும்,“விரதம் இரு, பட்டினி கிட, இந்த புத்தகங்களை எல்லாம் படி, இந்தக் கோயிலுக்குப் போ என்றெல்லாம் சொல்லாமல் மிக எளிமையான மந்திரத்தைச் சொல்லி விட்டாரே’’ என்று மகிழ்ச்சியோடு, “சரி’’ என்று சொல்லிவிட்டு விடை பெற்றுச் சென்றான். அன்று இரவு அரண்மனையில் திருடப் போனான். வழி தெரியாமல் அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் மாறு வேடத்தில் வந்தார். இவனைப் பார்த்து, “நில்’’ என்றார். இவன் பயந்து நின்றான்.

“நீ யார்?’’ என்றவுடன் அவன், “நான் திருடன். அரண்மனையில் திருட வந்திருக்கிறேன்’’ என்று உண்மையைச் சொன்னான். ராஜாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எந்தத் திருடனாவது நான் திருடன் என்பதை வெளிப்படையாகச் சொல்லுவானா? என்று வியந்தார். சரி, கொஞ்சம் இவனோடு விளையாடிப் பார்ப்போம் என்று நினைத்தார், ராஜா.“நானும் திருடன்தான். எனக்கு இந்த அரண்மனையின் ரகசியங்கள் எல்லாம் தெரியும். உன்னுடன் வருகிறேன் கிடைப்பதில் பாதி கொடுத்தால் போதும்’’ என்றார். ராஜா, நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார். ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. திருடன் சொன்னான், “இதில் மூன்று ரத்தினங்கள் உள்ளன. உனக்கு ஒன்று, எனக்கு ஒன்று. மூன்றாவது கல்லைப் பிரிக்க முடியாது. பாவம் உரியவனுக்காக இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்’’ என்றான். ராஜா வியந்தார். “இனி அடிக்கடி சேர்ந்து திருடுவோம்’’ என்று சொல்லி, திருடனை வீட்டில் விட்டு விட்டு ராஜா விடைபெற்றுச் சென்றார். மறுநாள் அரசவை கூடியது. மந்திரியை அனுப்பி கஜானாவை பார்த்துவரச் சொன்னார். மந்திரி பார்த்தபோது கஜானா உடைக்கப்பட்டிருந்தது. அவர் அதிர்ச்சியோடு சோதனை செய்ததில், ஒரு மாணிக்கக்கல் மட்டும் இருப்பதைக் கண்டார். திருடன் தெரியாமல் விட்டுவிட்டான். இரண்டு போனாலும் மூன்று போனாலும் ஒன்றுதான். திருட்டுக் கணக்கில் வைத்துவிடலாம் என்று எண்ணி இடுப்பில் முடிந்து வைத்துக் கொண்டார். அரசவைக்கு வந்தார். பதட்டத்தோடு சொன்னார்,“மன்னா, கஜானா பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக்கற்கள் திருடப்பட்டிருக்கின்றன’’ என்றார். ராஜா கேட்டார்.

“நன்றாகப் பார்த்தீர்களா? ஒரு கல்லைக் கூட விட்டுச் செல்ல வில்லையா?’’“இல்லை மன்னா, திருடர்கள் முட்டாள்களா, ஒரு கல்லை மட்டும் விட்டுச் செல்வதற்கு?’’ என்றார், நிதியமைச்சர்.“சரி திருடனைக் கண்டுபிடியுங்கள்’’ என்றார். ஒருவாரம் ஆயிற்று. யாரும் அகப்படவில்லை. ஒருநாள் மன்னரே ஒரு காவலரை அனுப்பி, திருடனைப் பிடித்து வரச் சொன்னார். “நீ தானே அரண்மனை கஜானவாவை உடைத்து மூன்று ரத்தினங்களைத் திருடினாய்…’’ உண்மை பேசும் விரதமிருந்த திருடன், “இரண்டு கல்தான் திருடினோம். ஒன்று பெட்டியில் வைத்துவிட்டோம்’’ என்றான். மன்னர், மந்திரியின் முகத்தைப் பார்க்க, அவர் முகம் இருண்டது..“சரி எங்கே கற்கள்?’’“ராஜா, நானும் இன்னொருவனும் சேர்ந்து திருடினோம். அவன் ஒரு கல், நான் ஒரு கல் என பிரித்துக் கொண்டோம். ஒரு கல்லைப் பெட்டியில் வைத்துவிட்டோம். இதோ.. நான் எடுத்த மாணிக்கம்’’ என எடுத்துக் காட்ட, அமைச்சர் பதட்டமாக; “பொய் சொல்கிறான். மூன்றையும் இவனே திருடிவிட்டு, ஒரே ஒரு கல் திருடியதாகப் பொய் சொல்கிறான்’’ என்று பதறினார். இப்போது ராஜா பேசத் தொடங்கினார்;

“உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல்’’ என ராஜாவும் எடுத்து காட்ட, பின்பு ராஜா அமைச்சரை நோக்கி, `நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்’’ என்றார். உடனே நிதியமைச்சர்; “மன்னவா! என்ன அபவாதம் இது? ஒரு நிமிடத்தில் இந்தத் திருடனின் பேச்சை நம்பி எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்’’ என்று பொய்யை திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கோபமடைந்த ராஜா; “நிதியமைச்சரே! அந்த ரத்தினக்கல்லை தரவில்லை என்றால், உமது உடைகளை சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட நேரிடும். அதன் பிறகு தண்டனை கடுமையாக இருக்கும்’’ என எச்சரித்தார். தலை குனிந்த அமைச்சர்; “மன்னவா! என்னை மன்னித்து விடுங்கள். கண நேரத்தில் சபலம் என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன். இதோ அந்தக் கல்’’ என்று மாணிக்கக் கல்லை எடுத்து வைத்தார். ராஜா; “நாணயம் தவறி நம்பிக்கைத் துரோகம் செய்த நீர், இனி மந்திரி அல்ல. இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும்விட உண்மையுடனும், ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக இந்தப் பதவியை வழங்குகின்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் பொய் சொல்லாது, உண்மையை மட்டுமே சொல்லும் இவனே அந்தப் பதவிக்கு தகுதியானவன்’’ என்று அறிவிக்கிறார். புதிய நிதியமைச்சர் மறுநாள் தனக்கு உபதேசம் செய்த பெரியவரைச் சந்தித்து, உண்மை சொன்னதால் ஏற்பட்ட நன்மையை மகிழ்ச்சியோடு சொன்னார்.

“சத்தியம் வத’’ (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் கட்டளை. “எனைத்தானும் நல்லவை கேட்க” – என்று வள்ளுவர் சொன்னதும், இதைத்தான். ஒரே ஒரு உபதேசமானாலும், அதை உறுதியோடு கடைப்பிடித்ததால், இந்த நிலைக்கு உயர்ந்தாய்’’ என்றார். நாம் எத்தனையோ நல்ல விஷயங்களைக் கற்கலாம். ஆனால், அவைகளை வாழ்க்கையில் பயன்படுத்தாவிட்டால் உயர்வு கிடைக்காது.

Tags : Sathyameva Jayate ,Ramapran ,Jadayu ,
× RELATED திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்