×

குன்றாத வளமருளும் குன்றத்தூர் முருகன்

தாரகன் எனும் அரக்கன் தான்தோன்றியாக திரிந்தான். தவம் செய்பவர்களை தடுத்தான். யாககுண்டங்களை தூக்கி எறிந்து வீசினான். பேரழகன் கந்தக்குமரன் சுப்ரமணியசுவாமி அசுரனின் ஆட்டத்திற்கு அவஸ்தைப்படும் மாந்தர் களைப் பார்த்தான். தணிந்திருந்தவன் தீந்தழலானான். அவன் அகத்தில் கோபத்தீ பெருஞ்சோதியாக எரிந்தது. சரியான காலத்திற்காக காத்திருந்தது. வேறொரு அற்புத தலத்தில் அமரும் காலம் வர குமரன் கனிந்திருந்தார். அந்தப் பிரதேசம் முழுவதும் பச்சைப் பசேலென வயலும், நீர்ச்சுனைகளும் நிரம்பி வழிந்தன. வயல்களின் மத்தியில் வைராக்கிய சீலர்போல் தவத்தால் சிவந்த கண்களாக தலைதாழ்த்தி விநயமாக பத்மாசனத்தில் அமர்ந்த யோகிபோல ஒரு குன்று பெருஞ்சக்தியை தம்மிடத்தே தேக்கிக் கொண்டிருந்தது. எப்போது வருவார் எந்தன் கந்தன், என் சிரசில் அவர்தம் திருவடிபடும் நாள் என்று நிகழும் என்பதாக ஒரு அடக்கம் இருந்தது. அதேசமயம், அந்தக் குன்று மட்டும் தாரகனை கவனத்தோடு கவனித்தது. குன்று கவனித்ததை குமரன் தன் திருக்கண்களால் பார்க்க வில்வமரங்கள் சிலிர்த்தது. இன்னும் கம்பீரமாக நிமிர்ந்தது. அந்த வில்வவனத்தின் வனப்பும், ஈர்ப்பையும் கண்ட மாமுனிகள் அந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

வெகுதொலைவே முத்துக்குமரன் முப்படைகளோடு திருக்கூவம் எனும் தலத்தில் மறைந்திருக்கும் தாரகனை தாக்க தொடர்ந்து நடந்தார். தாரகன் மாயம் செய்து மறையப் பார்த்தான். மாமுருகனின் அண்மையில் இவன் விளையாட்டு பலிக்காமல் போனது. தான் பெற்ற சகல இந்திர ஜாலத்தையும் செய்து காட்டினான். ஒரு சிறிய அளவு கூட செந்தில்வேலனை அசைக்க முடியவில்லை. பதுங்கிய தாரகப்படைகள் சட்டென்று திருப்போரூர் எனும் தலத்தில் மிக பலமாக முளைத்தெழுந்தது. மால்மருகன் போரூர் அடைந்தான். போர் தொடங்கியது. அசுரப்படைகள் கந்தனின் ஆறுமுகமும் எண்புறமும் நின்று அனாயசமாக போர்புரியும் காட்சி பார்த்து மிரண்டது. முருகன் பிழம்பானார். தழலாகமாறி அசுரக்கூட்டத்தையே புரட்டிப் போட்டார். பெரும்புயலுக்கு மத்தியிலும் சீர்வளச் செல்வனின் இதயத்தில் குன்றுவின் நினைவு மிக பலமாக வளர்ந்தது. கண்கள் மூடி இதமாக அகத்தில் வளர்ந்த மலையை வருட எங்கேயோ இருந்த குன்றின் மீது வானம் மெல்லிய சாரலாக மழையைப் பொழிந்தது. சட்டென்று எதிரே கொக்கரிப்போடு நின்றிருந்த தாரகனைப் பார்த்தவர் சற்றே தயங்கினார். தனது மாமனான நாராயணனின் பக்தியால் குழைந்து கிடந்த உள்ளம் பார்த்தார்.

இவன் வதம் புரியத் தக்கவனன் அல்லன். இவனிடம் தனியே துருத்திக்கொண்டு தெரியும் அகங்காரம் எனும் சிரசை அறுத்தால் போதும் என கருணையோடு பார்த்தார். தாரகன் அருகே வந்தான். கந்தன் தமது ஞானக்கனலை அவன் மீது வீச அசுரன் திக்குமுக்காடினான். வேல் எனும் கூர்மையான ஞானத்தை அவன் இதயத்தில் பாய்ச்ச மாபெரும் சப்தத்தோடு அலறி பூமியில் சரிந்தான். புத்தம் புது மலர்போல மாறியவன் குமரனின் திருப்பாதத்தில் பரவினான். இச்சா என்கிற வள்ளியோடும், கிரியா என்கிற தெய்வானையோடும் பூரண ஞான சொருபனான கந்தன் அந்தத் திருக்குன்று நோக்கி நடக்க ஆயிரமாயிரம் தேவர்கள் புடை சூழ தொடர்ந்தனர். குன்று இன்னும் தாழ்ந்து, வாகாக அவரை ஏற்க தயாரானது. துள்ளலோடு குன்றின் அடிவாரத்தை நெருங்கினர். மகரிஷிகள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று எம்பெருமானைக் காணத் தவித்தார்கள். குன்று செய்த தவம், பாக்கியத்தால் திருமுருகன் வள்ளி, தெய்வானையோடு மெல்ல தமது பூவடிகளை குன்றின்மீது பதிக்க நெகிழ்ந்தது. நடந்து உச்சிக்கு செல்ல தம்மை மறந்தது. தேவக்கூட்டமும், மாமுனிகளும், மாந்தர்களும் அரோகரா… அரோகரா… என்று பிளிற ஈரேழு உலகமும் அதிர்ந்தது. ஞானமூர்த்தியான முருகப்பெருமான் திடமாக நிரந்தரமாக தமது அருட்திறத்தை, சாந்நித்யத்தை நிரந்தரமாக பதித்தார். திருக்கண்களால் அப்பிரதேசத்தை அளந்தார். கருணை விழிகளால் அணைந்தார். வெற்றிக்கோலம் காட்டி நின்றார். எம்பெருமான் ஒரு முகூர்த்தகாலம் எனும் நேர அளவு குன்றில் நின்று மெதுவாக கீழிறங்கி திருத்தணிகை எனும் திருத்தணி நோக்கி நடந்தார். ஆயினும் அவர் முழு உள்ளத்தின் பேரன்புக் கருணை வடிவம் தனித்தோற்றம் கொண்டு அழகன் முருகனாக அம்மலையில் நிரந்தர வாசம் புரிந்தது.

சுப்ரமணியசுவாமியின் வாசம் அருணகிரிநாதரின் அகத்தில் தோய அந்த மகான் குன்றின் திசை நோக்கி ஓடோடி வந்தார். சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானையோடு நின்ற கோலம் பார்த்து களிப்புற்றார். அகத்தில் பொங்கிய ஞானப்பிரவாகத்தை அழகிய வார்த்தைகளாக வடித்தெடுத்து பதிகங்கள் செய்தார். கண்டேன்…கண்டேன்… என இளங்குமரனின் எழிற்கோலத்தை இமைகொட்டாது கண்டு களித்தார். குன்றின் அழகைக் கண்டு தம்மை மறந்தார். மெல்லிய பூங்காற்றினில் அலையும் வில்வத்தின் வாசத்தை தம் இதயம் முழுதும் தேக்கி அழகன் உறையும் அடுத்த தலம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். குன்றத்தூரின் மையமாக இருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து சற்று முன்னே வர நகரின் பழமையும், வரலாற்றுச் சிறப்பை விளக்கும் விஷயங்களும் ஒவ்வொன்றாக கண்முன் விரிகிறது. சென்னையின் விஸ்தீரம் இந்த மலையிலிருந்து பார்க்கும்போது மலைக்க வைக்கிறது.

குன்றைப் பார்க்கும்போது பரமபக்தன் எம்பெருமானின் திருவடிகளைத் தாங்கவே மலையுருவுவாக மிக விநயமாக அமர்ந்துள்ளதைப் போன்றதொரு தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தக் குன்று இருப்பதாலேயே குன்றத்தூர் எனப் பெயர் பெற்று விளங்குகிறது. குன்றத்தூரின் சிகரச் சிறப்புகளில் ரத்னமாக விளங்குவது சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர் என்பதேயாகும். சேக்கிழார் நாகேஸ்வர பெருமானுக்கு இவ்வூரிலேயே கோயில் கட்டியுள்ளார். சேக்கிழார் பிறந்த இல்லத்தை கோயிலாக மாற்றியுள்ளனர். குன்றின் கீழேயே அவரும் குடி கொண்டுள்ளார். கந்தழீஸ்வரர் எனும் சிவாலயமும், வேங்கடவன் உறையும் வைணவத் தலமும் குன்றின் அடிவாரத்திலே உள்ளது. இரண்டாம் குலோத்துங்கன் கட்டிய கோயில் என்கிறார்கள். இரு தலத்தையும் பார்த்துவிட்டு நிமிரும்போது குன்றின் கிரீடமாக ஜொலிக்கும் முருகன்கோயில் மேகத்தை உரசிக்கொண்டிருக்கிறது. எழுபத்தைந்து படிகளைத் தாண்டி முகப்பிலுள்ள பதினாறு கால்மண்டபத்தை அமர்ந்து அருகேயுள்ள வலஞ்சுழி பிள்ளையாரை தரிசித்து கோபுரவாயிலை அடையலாம். நெடிதுயர்ந்து நிற்கும் ராஜகோபுரவாயிலை நெருங்கும்போது மலையை வளைத்துச் செல்லும் காற்று நம்மை அணைத்துச் செல்லும்போது மனமும் பஞ்சுபோல் லேசாகிறது.

கோயிலுக்குள் நுழைய வெளிமண்டபத்தில் இன்னொரு சிறிய விநாயகர் தரிசனம் தருகிறார். அதன் வலப்புறத்தேயே சிறிய காசி விஸ்வநாதர், விசாலாட்சி சந்நதிகள் உள்ளன. எல்லாத் தலங்களிலும் இம்மாதிரி ஒரு காசிநாதர் இருப்பது தொன்று தொட்டு வரும் மரபு. அவ்விருவரையும் அகத்தில் ஏந்தி நேரே உள்ளுக்குள் பார்க்க சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுந்தரக்கோலம் கண்ணை நிறைக்கிறது. அருகே செல்லச் செல்ல மனதையும் தன் வசம் இழக்க வைக்கிறது. இந்த சந்நதியில் விபூதியின் மணம் அகமும், புறமும் பாய சிவமைந்தன் செங்கதிர்வேலனாக திகழ்கிறான். போர்முடித்து வெற்றித் திருமகனாக திரும்பியவன் வடக்கு நோக்கி திருத்தணியின் திக்கான வடக்குநோக்கி நிற்கிறான். நான்கு கரங்களில் ஒரு கரத்தில் வேலையும், மறுகரத்தை சற்றே முன்புறம் மடித்து ராஜகம்பீரத்தோடு திகழும் கோலம் காணக்கிடைக்காத ஒன்று. மேலிரு கரங்களில் ஆயுதங்கள் தரித்திருக்கிறான். யந்திரஸ்தாபனம் செய்திருக்கிறார்கள். இதற்கும் அபிஷேகம் புரிகிறார்கள்.

கர்ப்பக்கிரகத்தின் வாயிலில் நின்று ஒரு நேரத்தில் மூவரையும் தரிசிக்க முடியாது. ஒரு புறத்தில் நின்று பார்க்க முதலில் வள்ளியையும், மறுபுறம் நின்று பார்க்க தெய்வானையையும் பார்க்கும் அமைப்பில் கட்டியிருக்கிறார்கள். செந்திலாண்டவன் இத்தலத்தி மணக்கோலம் பூண்டருளியதால் இன்னும் மணமாகவில்லையே என்று வருந்துவோர் இத்தலத்திற்கு வந்து தரிசிக்க வெகுசீக்கிரம் தம்பதியராக வந்து வணங்குவதை இங்கு சகஜமாகக் காணலாம். இந்த குன்றுக் குமரனை நாடியோர் பலர் மலையளவுப் புகழும் பெருஞ்செல்வமும் பெற்று நிறைவுற வாழ்கிறார்கள் என்பது சுப்ரமணியரின் முன்பு கைகூப்பி வணங்கி ஆனந்தக் கண்ணீர் சொரியும்போது புரியும். ஏனெனில் ‘‘செல்வமா குன்றத்தூர் செப்பரியகுன்றைப்பதி’’ என்றும், ‘‘மெய்ம்மையை விரித்துத் தெரிந்தருள் செய் குன்றத்தூர்’’ என்று பல்வேறு புலவர்கள் இவன் புகழைப் பாடுகிறார்கள். தைப்பூசம், சஷ்டி, கிருத்திகை என்று மாதாந்திர வருடாந்திர விழாக் காலங்களில் இக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரளாய் கூடுவார்கள். இத்தலம் சென்னை – பூந்தமல்லியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதேநேரம் சென்னை தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் மார்க்கத்திலும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.

 

Tags : Kundratur Murugan ,Tarakan ,Perazhagan Kandakumaran ,Subramaniaswamy ,
× RELATED திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்