தமிழக அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் நேரங்களிலும் சீமானின் மேடைப் பேச்சுகளும், தொடர் பொதுக்கூட்டங்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும். ஆனால், இந்த முறை 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்ததைத் தாண்டி, சீமான் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களையோ அல்லது மக்கள் சந்திப்புகளையோ இன்னும் தீவிரப்படுத்தவில்லை. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்கள் பகுதிகளில் விளம்பரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இருப்பினும், தற்போது தேர்தல் வேலைகளில் பழைய வேகம் சீமானிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சைலண்ட் மோடுக்கு போயிருக்கிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் பணிகளில் பெரிய அளவில் வேகம் எடுக்காமல் இருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே ஒருவித தொய்வை ஏற்படுத்தியுள்ளதாம்.
