×

கட்சி ஆபீஸ்: கட்சி சார்புல என்ன பண்ண போறாங்கன்னே தெரியல!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில, தேர்தல் வேலை எப்படி இருக்குனு பார்க்க ‘எடுடா வண்டியன்னு’ ராயப்பேட்டை பகுதியில் இருக்கிற தேசிய கட்சி ஆபிஸான தமிழ்நாடு காங்கிரஸ் ஆபிஸுக்கு போனோம். காலைல தலைவர் (செல்வப்பெருந்தகை) ஆபிஸ்க்கு வந்தார். அவர தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் என எல்லாரும் பாத்துட்டு இருந்தாங்க, அதனால அலுவலகம் கொஞ்சம் பிஸியா இருந்துச்சி. அப்போது காங்கிரஸ் கரை வேட்டி கட்டி இருந்த ஒரு மூத்த நிர்வாகி ஒக்காந்து கட்சி பணியை செஞ்சுட்டு இருந்தாரு, அவருகிட்ட போய் எப்படி அண்ணே வேலை எல்லாம் போகுதுனு கேட்டு பேசிட்டு இருந்தோம். அப்போ, ஒரு வெள்ளை சட்டை போட்டுட்டு கட்சி லெட்டர் பேடோட வந்து ‘அண்ண கிட்ட பேசிட்டன்னு’ பட்டா பிரச்னை குறித்து மூத்த நிர்வாகி கிட்ட பேசிட்டு இருந்தாரு.

அப்போ கரை வேட்டி கட்டி இருந்த நிர்வாகி கட்சி சார்புல முடிச்சிரலாம் என பேசிட்டு அவர அனுப்பி வெச்சாரு. உடனே அந்த வெள்ளை சட்டை போட்டு இருந்தவர்கிட்ட என்னன்னு கேட்டோம். அப்போ அவரு, ஒரு பிரச்னைக்கு வெள்ளை பேப்பர்ல லெட்டர் தர்றதுக்கும், கட்சி லெட்டர் பேட்ல தர்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. கட்சி லெட்டர் பேட்ல கொடுக்குறப்ப பிரச்னை சீக்கரமா முடியும்னு சொன்னாரு. அதுக்கு அப்புறம் பேசிட்டு இருக்கும்போது, கரை வேட்டி கட்டி இருந்த மூத்த நிர்வாகி, ‘கட்சி வேலை எல்லாம் நல்லாதான் போகுது, கூட்டணி பேச்சுவார்த்தைதான் அடுத்துனு சொன்னாரு’, உடனே புதிய கட்சி, கூட்டணி மாற்றம், கூட்டணி பிரச்னை இருக்கான்னு கேட்டோம். அதுக்கு அவரு, ‘அது எல்லாம் ஒன்னும் இல்லை, கூட்டணி நல்லாதான் இருக்கு, அடுத்த வாரத்துக்கு அப்புறம்தான் பேச்சுவார்த்தைக்கு போகணும், வழக்கமா 5 பேரு கொண்ட குழு தான் போவோம். அதுபோல இப்பவும் நடக்க போவுதுனு சொன்னவரு, வேல இருக்கு கிளம்புறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.

சாயிங்காலம் மறுபடியும் போனோம், கட்சி அலுவலகம் காலியாக ஆரம்பிச்சது. புறா ஒன்னு கட்சி அலுவலக வாகனம் நிறுத்தும் மைதானத்தில இருந்துச்சி. அதற்கு ஒரு அம்மா தானியம் போட்டுட்டு இருந்தாங்க. உள்ள இரண்டு பேர் உதவிக்காக ஒக்காந்துனு இருந்தாக, அவங்களுக்கு எதிர்ல தலைப்பாகையோட வெள்ளை ஆடை போட்டுட்டு ஒரு கட்சி நிர்வாகியும் அவருடன் சிவப்பு மற்றும் வெள்ளை சட்டை போட்ட ரெண்டு பேரும் இருந்தாக. அவங்ககிட்ட போய் அண்ண (செல்வப்பெருந்தகை) இருக்காரான்னு கேட்டோம். அதற்கு ரெண்டு பேரும் இப்படி பதில் சொன்னாங்க.

சிவப்பு சட்டை: அண்ண இல்ல, இப்போதா கிளம்பி போனாரு. காலைல இருந்து இங்கதான் இருந்தாரு. ஒரு 3 மணி போலதான் கிளம்பி போனாரு. டெய்லி இப்படி காலைல வந்துருவாரு. கட்சி ஆளுங்கள பாத்துட்டு இருப்பாரு.
வெள்ளை சட்டை: சென்னையில இருந்தா ஆபிஸ் கண்டிப்பா வந்துருவாரு.

அவங்க இப்படி சொன்னதும் சரின்னு சொல்லிட்டு உள்ளே போனோம். இரண்டு போர்டு (standy flex) இருந்தது. என்னன்னு போய் பார்த்தோம். அதுல கியூ ஆர் கோடு இருந்தது. ஸ்கேன் செய்தோம். அதில் `2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் பணிகள், மக்கள் நல கருத்துகள், இயக்கங்கள் மற்றும் அறிவிப்புகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் இந்த வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் இணைவோம்’னு குறிப்பிட்டு இருந்தது. அதைப் பத்தி பக்கத்தில இருந்த ஒருத்தர் கிட்ட விசாரிச்சோம், அப்போ அவர், இது வாட்ஸ் ஆப்-காக ரெடி பண்ணி இருக்காக. கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்கள், அப்பறம் கட்சி தொடர்பாக இருக்குற தகவல் எல்லாம் போடுவாக. இப்போதா வெச்சாக. இங்க வர எல்லாரும் ஸ்கேன் செய்து சேர்ந்துட்டு வராகனு சொன்னாரு.

அதைக் கேட்டுட்டு உள்ள போனா, காங்கிரஸ் கட்சி வார் ரூம்ல வேல செய்றவங்க வெளியில் வர; உள்ளே போகன்னு பிஸியா இருந்தாக. அப்பறம் உள்ளே ரெண்டு கட்சி நிர்வாகிகள் கட்சி வேலைய பாத்துட்டு இருந்தாக. அவங்ககிட்ட போய் `தேர்தல் வேலை எப்படி அண்ண போகுது’ன்னு கேட்டோம்.

கட்சி நிர்வாகி: அண்ண சென்னை, வெளி மாவட்டம்னு பரபரப்பாக இருக்காரு. இந்த வாரம் பெரிய அளவுல மீட்டிங் இல்ல. அடுத்த வாரத்துல இருந்து ரொம்ப பரபரப்பா இருக்கும்போது, நீங்களே ( பத்திரிகையாளர்கள்) பரபரப்பாக இருப்பீங்க. கூட்டணி பேச்சுவார்த்தை கூட இருக்கு. அதனால தேர்தல் பணி பரபரப்பாக போயிட்டு இருக்கு. அப்புறம்… விருப்ப மனு எல்லாம் வாங்கி முடிச்சிட்டோம். ஆனால் நேர்காணல் நடக்கல. என்ன பன்ன போறாங்கன்னு தெரியல, கூட்டணி பேச்சுவார்த்தை வேற நடக்கப்போகுது. கட்சி சார்புல என்ன பண்ண போறாங்கன்னு தெரியலன்னு புலம்பிக்கிட்டு இருந்தாரு. அவருகிட்ட பேசிட்டு அப்படியே வண்டி எடுத்துட்டு கிளம்பிட்டோம்.

Tags : Tamil Nadu Congress ,Royapettah ,Selvapperundhagai ,
× RELATED அமமுகவை உடைக்க சசிகலா திட்டம்