அவமானம் பற்றி நீங்கள் பேசுவதா? எப்ஸ்டீன் பைலில் உங்கள் பெயர் இருப்பது அவமானமாக இல்லையா?: பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பதிலடி

 

புதுடெல்லி: டெல்லியில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் அரைநிர்வாண போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விமர்சனம் செய்த பிரதமர் மோடி,’ காங்கிரஸ் கட்சி அழுக்கு மற்றும் வெட்கமற்ற அரசியல் நடத்துகிறது. அவமான அரசியல் நடத்துகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ள காங்கிரஸ் கட்சியினர் தற்போது ஆடைகளை அவிழ்த்து இருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார். இதற்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: மோடிஜி, நீங்கள் அவமானம் பற்றிப் பேசுகிறீர்களா? அவமானம் என்றால் என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். எப்ஸ்டீன் கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் அமைச்சர் மற்றும் உங்கள் நண்பரின் பெயர்கள் ஒன்றாகக் காணப்படுகின்றன. இவ்வளவு மோசமான குற்றவாளியுடன் நீங்கள் இணைக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதுதான் அவமானகரமான விஷயம்.

நீங்கள் அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தம், அதில் நீங்கள் நாட்டையே விற்றுவிட்டீர்கள். அதுதான் வெட்கக்கேடானது. நீங்கள் எங்கள் நாட்டின் தரவை ஒப்படைத்துவிட்டீர்கள். விவசாயிகளை அழித்துவிட்டீர்கள். நீங்கள் ஜவுளித் தொழிலை நாசமாக்கிவிட்டீர்கள் – அது வெட்கக்கேடானது. அமெரிக்காவில் அதானிக்கு எதிராக நடந்து வரும் வழக்கு உங்களை இரவில் விழித்திருக்க வைத்துள்ளது என்பது முழு நாடும் அறிந்ததே. ஏனெனில் இது பாஜ மற்றும் உங்கள் நிதிக் கட்டமைப்பிற்கு எதிரான வழக்கு. 14 மாதங்களாக, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது வெட்கக்கேடானது. மோடிஜி, உங்கள் நண்பர்கள் அனில் அம்பானி, அதானி மற்றும் உங்களுக்கு எது பொருத்தமானதோ அதைச் செய்யுங்கள். நானும் காங்கிரசின் சிம்ம இதயம் கொண்ட வீரர்களும் நாட்டைப் பாதுகாப்போம். நாங்கள் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். நாட்டைப் பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு கூறியிருக்கிறார்.

 

Related Stories: