ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு வரும் 28ம் தேதி பிரதமர் மோடி வருகிறார். பிரதமர் வரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி டோங்க் மாவட்டம், கரேடா கிராமத்தில் உள்ள கோயில் வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்பி சுக்பீர்சிங் ஜான்புரியா கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த ஏழைகளுக்கு இலவசமாக போர்வைகள் விநியோகிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுக்பீர்சிங் பெண்களுக்கு போர்வைகளை வழங்கினார். அப்போது ஒரு பெண்ணிடம் போர்வையை வழங்கினார். பின்னர் அந்த பெண்ணிடம் அவருடைய மதத்தை கேட்டார்.
அந்த பெண் முஸ்லிம் என்று கூறியதும் அந்த போர்வையை திருப்பி வாங்கி கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், பிரதமர் மோடியை திட்டுபவர்களுக்கு இந்த போர்வையை வாங்க உரிமை இல்லை என்று அவர் கூறுவதையும் வீடியோவில் கேட்க முடிகிறது. முன்னாள் எம்பியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் அந்த கிராமத்துக்கு சென்று ஏழை முஸ்லிம் பெண்ணுக்கு ஒரு போர்வையை வழங்கினர்.
