விடுமுறை எதிரொலி திமுகவில் விருப்ப மனு வினியோகம் விறுவிறுப்பு

 

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு வினியோகம் நேற்று விறுவிறுப்பாக நடந்தது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஆகியோர் எங்கள் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று நிறைய பேர் விருப்பமனுக்களை அளித்தனர். மேலும் தற்போதைய எம்எல்ஏக்களும் பலர் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனர். இதனால் முதல் நாளில் விருப்ப மனு வினியோகம் என்பது சுமார் 2 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து நேற்று முன்தினமும் நிறைய பேர் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். 3வது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் முகூர்த்த நாட்கள் வேறு வந்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேற்று நிறைய பேர் விருப்ப மனுக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பலர் அங்கேயே விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்கினர். இதனால் நேற்று நிர்வாகிகள், தொண்டர்கள் என அண்ணா அறிவாலயத்தில் திரண்டதால் கூட்டம் அலைமோதியிருந்ததை பார்க்க முடிந்தது. பூர்த்தி செய்த விருப்பமனு விண்ணப்பங்களை திமுக தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, மேலாளர் பத்மநாபன் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். வரும் 2ம் தேதி வரை விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நாட்களில் விருப்ப மனு வினியோகம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் விண்ணப்பித்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: