சென்னை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இரு அலகுகளை கொண்ட அனல்மின் நிலையம், கடற்கரையையொட்டி துறைமுகம் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்தது. தற்போது துறைமுகம் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றும், அனல்மின் நிலைய வளாகத்தில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் இரவு பகலாக நடந்தது, அதுவும் நிறைவடையும் நிலையில் உள்ளது. தற்போது நிலக்கரி மூலம் மின் உற்பத்தி சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு தேவையான 20 ஆயிரம் டன் நிலக்கரி சரக்கு கப்பல் மூலம் இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. அங்கிருந்து கடல் வழியாக உடன்குடி அனல்மின் நிலையத்திற்காக அமைக்கப்பட்டுள்ள நிலக்கரி இறக்குதள துறைமுகத்திற்கு அந்த கப்பல் வந்துள்ளது.
விரைவில் நிலக்கரிகள் இறக்கப்பட்டு அனைத்தும் அனல் மின் நிலையத்திற்குள் ஆசியாவிலேயே 8 கிமீ தூரம் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் கன்வேயர் மூலம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் நாளை (24ம்தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைக்கலாம் அல்லது இம்மாத இறுதிக்குள் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்கி வைக்கப்படலாம் என தெரிகிறது.
