புதுடெல்லி: எதிர்காலத்தில் உலகம் செயற்கை நுண்ணறிவின் சக்தியை எவ்வாறு பயன்படுத்தும் என்பதில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றும், இத்துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களால் உலகத் தலைவர்கள் ஈர்க்கப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். பிரதமர் மோடி தனது 131வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஏஐ உச்சிமாநாட்டின் போது, பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில் தலைவர்கள் ஒன்றிணைந்த ஒரு சாதனையை நாடு கண்டது. எதிர்காலத்தில் உலகம் ஏஐ.யின் சக்தியை எவ்வாறு பயன்படுத்தும் என்பதில் இந்த உச்சிமாநாடு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்களுக்கு எண்ணற்ற விஷயங்களைக் காட்டியது.இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாட்டில், உலகத் தலைவர்கள் இந்த ஏஐ முன்னேற்றங்களால் ஈர்க்கப்பட்டனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளுக்கு பெருமை தேடித் தருகிறார்கள். இது நடந்து வரும் டி-20 உலகக் கோப்பையில் தெளிவாகத் தெரிகிறது. இந்திய வம்சாவளி வீரர்கள் பலர் தங்கள் நாடுகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தியர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் தங்கள் தாய்நாட்டின் வேர்களுடன் இணைந்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் ரம்ஜான் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்விற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் சில நாட்களில் ஹோலியும் வரப்போகிறது. ஹோலி கொண்டாட்டங்களிலும், மற்ற பண்டிகைகளிலும் கூட பல வெளிநாட்டு தயாரிப்புகள் நுழைந்துள்ளது. ஹோலியிலிருந்தும் அவர்களை விலக்கி வைக்கவும், சுதேசியை ஏற்றுக்கொள்ளவும். நீங்கள் சுதேசி வாங்கும்போது, நாட்டை தன்னிறைவு பெறச் செய்வதற்கான பிரச்சாரத்திற்கும் உதவுகிறீர்கள்.
கேரளாவைச் சேர்ந்த ஆலின் ஷெரின் ஆபிரகாம் என்ற சிறுமி மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளைத் தானம் செய்து மற்றவர்களுக்கு வாழ்வளித்துள்ளார். ஆலினைப் போன்றவர்கள் உறுப்பு தானம் மூலம் மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கிறார்கள். இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா. இந்தியாவில், சமூக நலனுக்காகப் பாடுபட்டவர்கள், மக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள், எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். தமிழகத்திற்கு வருகை தரும் போது தமிழக மக்கள் அவர் மீது கொண்டிருந்த பாசத்தை இன்னும் உணர்கிறேன். ஜனாதிபதி மாளிகையில் உள்ள பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யென்சின் சிலைக்கு பதிலாக சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் சிலை நிறுவப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
