டெல்லி : வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்பும் எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடரலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க கொல்கத்தா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஓய்வுப்பெற்ற நீதிபதிகளை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்திற்கும் மாநில அரசுக்கும் இடையே போதிய நம்பிக்கை இல்லை என்பதை இந்த உத்தரவை பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து உத்தரவுகளை பிறப்பிக்கவும் ஆணையிடப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றம், “ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சேபனை மனுக்களை பரிசீலனை செய்யும் பணியை நீதிபதிகள் கண்காணிப்பர். நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு தேர்தல் ஆணையம், மாநில அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்பும் எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடரலாம். தேர்தல் ஆணையம், மாநில அரசு இடையே பரஸ்பரநம்பிக்கையின்மை ஏற்பட்டது வருந்தத்தக்கது. பிப். 28க்கு பின் ஆணையம் வாக்காளர் பட்டியல் வெளியிடலாம்;ஆனால் அதுவே இறுதி வாக்காளர் பட்டியல் அல்ல,”இவ்வாறு தெரிவித்தது.
