ஊட்டி, பிப். 20: நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அரசு கலை கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் உள்ள 15க்கும் மேற்பட்ட துறைகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரூ.9.5 கோடி மதிப்பீட்டில் 14 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்டிஓ டினு அரவிந்த், கல்லூரி முதல்வர் பிராங்க்ளின் ஜோஸ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார் மற்றும் திட்டக்குழு உறுப்பினர் விசாலாட்சி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
