சென்னை: ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்களின் நெருக்கடி காரணமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. இது எடப்பாடி, அமித்ஷா ஆகியோரின் மெகா கூட்டணி திட்டத்தை உடைத்து தவிடு பொடியாகியுள்ளது. அவர்களின் வியூகத்தை மு.க.ஸ்டாலின் அதிரடியாக உடைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு இந்த மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது.
நடைபெற உள்ள 17வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவி உள்ளது. அதாவது, ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் தவெக தலைமையில் இன்னொரு அணி, நாம் தமிழர் கட்சி தனித்து என 4 முனைப்போட்டி நிலவி இருக்கிறது. 4 முனை போட்டியிருந்தாலும் திமுக, அதிமுக கூட்டணிக்கு இடையே தான் போட்டி உருவாகியுள்ளது. 3வது மற்றும் 4வது இடத்துக்கு தவெகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டி போடுகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமியும், அமித்ஷாவும் ஈடுபட்டுள்ளனர். கூட்டணி அமைப்பதில் எடப்பாடி பழனிசாமி தாமதம் காட்ட தொடங்கியதால், அமித்ஷாவே நேரடியாக களம் இறங்கினார். அவர் பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி. தினகரன் ஆகியோருடன் பேசி கூட்டணிக்கு அழைத்து வந்தார். தேமுதிக மற்றும் பாமகவின் ராமதாஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. அதே நேரத்தில் தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கருத்து கேட்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அந்த பெட்டியில் மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்துகளை எழுதி அதில் போட்டனர்.
அதில், அனைத்து மாவட்ட செயலாளர்களின் விருப்பம் என்பது திமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதாக தான் இருந்தது. வேறு எந்த கூட்டணிக்கும் செல்ல வேண்டாம் என்றும் கருத்துகளை தெரிவித்து இருந்தனர். அப்படி வேறு கூட்டணிக்கு சென்றால் எங்களுக்கு எம்எல்ஏ சீட் வேண்டாம். தோற்கும் கூட்டணியில் இணைந்து எதற்காக பணத்தை செலவு செய்ய வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும் மாநிலங்களவை எம்பி சீட் தருவதாக கூறி கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கழுத்தை அறுத்து விட்டார். இப்போது ஏன் நாம் அவர்கள் கூட்டணிக்கு செல்ல வேண்டும். அன்புமணிக்காக சீட் கொடுத்தவர்கள், நமக்கு ஏன் கொடுக்கவில்லை. இதனால் கூட்டணி வேண்டாம் என்று கூறி வந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து தேமுதிக தலைவர்களிடம் கூட்டணிக்கு வரும்படி வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தான் தமிழத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் திமுக 4, அதிமுக 2 இடங்களில் வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது. அதிமுக ஒன்றை எடுத்துக் கொண்டு மற்றொன்றை தேமுதிக, பாமக, அமமுகவில் யாருக்கு கொடுப்பது என்று ஆழ்ந்த யோசனையில் இருந்து வந்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில் திமுக கூட்டணியில் இணைய தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா ஒப்புக் கொண்டார். அதை தொடர்ந்து, நேற்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வந்தார்.
அவருடன் பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, துணை பொதுச்செயலாளர்கள் சந்திரன், பன்னீர்செல்வம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் வந்தனர். அவர்களை வாசலுக்கே வந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் வரவேற்று அவர்களை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை துணை பொதுச்செயலாளர் கனிமொழி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து, பிரேமலதா திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது பிரேமலதா சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்தார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து பிரேமலதா அளித்த பேட்டி, ‘‘தேமுதிக யாரோட கூட்டணி அமைக்கப் போறீங்க அமைக்கப் போறீங்கன்னு பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்தீங்க.
அதற்கான விடை இன்றைக்கு அறிவிச்சாச்சு. தேசிய முற்போக்கு திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இன்றிலிருந்து நம்ம வந்து கூட்டணியை உறுதி செய்திருக்கிறோம்” என்றார். திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் வருகிற 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. திமுக தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பிறகு திமுக தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு எத்தனை சீட் என்பது குறித்து இறுதி செய்யப்படும்.
திமுக தலைமையிலான அணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பே அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் கே.என்.நேரு ஆகியோர் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை இறுதி செய்துள்ளனர். நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்படி, தேமுதிகவிற்கு 7 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க திமுக சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக தரப்பில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சென்னையில் விருகம்பாக்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் (மார்ச் 16) நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில், தேமுதிகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்படவும் முடிவு செய்யப்பட்டது. இதுவே இந்தக் கூட்டணியின் முக்கிய அச்சாரமாக அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜவின் ‘மெகா கூட்டணி’ முயற்சிக்குப் பெரிய பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது. கடந்த 2011ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது தேமுதிக. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த ஒரே பெரிய கட்சியாக தேமுதிக அங்கம் வகித்தது. கோவை ஈஷா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பிரேமலதா தோன்றியது, அதிமுக கூட்டணி தொடரும் என்ற எண்ணத்தை விதைத்தது.
ஆனால், அந்த யூகங்கள் அனைத்தும் தற்போது தவிடுபொடியாகியுள்ளன. கடந்த 2019-20 காலக்கட்டங்களில் அதிமுக கூட்டணியில் இருந்த போது, மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறி அதிமுக ஏமாற்றியது தேமுதிக தலைமைக்கு தீராத அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 2011க்குப் பிறகு நடந்த தேர்தல்களில் தேமுதிகவால் ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி சீட்டைக் கூட வெல்ல முடியவில்லை. கட்சியின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள திமுக கூட்டணியே சிறந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், கணிசமான வாக்கு வங்கியைக் கொண்ட தேமுதிக வெளியேறியது அதிமுகவிற்குப் பெரும் சவாலாக அமையும்” என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தேமுதிக இணைந்துள்ளது, கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த கூட்டணி அமைந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வியூகத்தை முதல்வர் மு.கஸ்டாலின் தவிடு பொடியாக்கியுள்ளார். காங்கிரஸ் கடந்த சில நாட்களாக திமுக கூட்டணியில் 2வது பெரிய கட்சி என்று பேசி வந்தது. தற்போது காங்கிரசுக்கு இணையான செல்வாக்கை கொண்ட தேமுதிக வந்துள்ளது, காங்கிரசின் கூட்டணிக் கணக்கை தற்போது முற்றிலும் மாற்றிவிட்டுள்ளது.
* நண்பர் விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக கூட்டணியில் இணைந்து இருப்பது மகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளம் பதிவில்,, ‘‘கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று (நேற்று) மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தை தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்தையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம். வெல்வோம் ஒன்றாக\\” என்று பதிவிட்டுள்ளார்.
